வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பாவம் ஓரளவு குறைந்திருக்கிறது என்பதை மனிதர்கள் எப்படி அறிந்து கொள்வது குறித்து அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



பாவங்கள் குறைந்தாலும் அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும்கூட பெருங்காயப் பேழைபோல் அதன் நறுமணம் தாக்கிக்கொண்டேதான் இருக்கும். இருந்தாலும் பாவம் கூடுமானவரை குறைந்திருக்கிறது, மிக, மிக சிறிய அளவுதான் இருக்கிறது என்றால் தன்முனைப்பும், அகங்காரமும் இல்லாமல் போய்விடும். ‘ நான் யார் ? நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன் ? என் வலிமை என்ன ? என்னுடைய செல்வம் என்ன ? என் பதவி என்ன ?  என் செல்வாக்கு என்ன ? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான் ? ‘ என்பது போன்ற எண்ணங்களெல்லாம் மெல்ல, மெல்ல விலகிவிடும். மனம் அமைதியை விரும்பும், கூடுமானவரை தனிமையை விரும்பும். ‘ புரிதல் இல்லாத மனிதர்கள் எது வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். அவன் விதி அவன் அவ்வாறு நடந்துகொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்வோம் ‘ என்ற ரீதியில்தான் மனித மனம் இருக்கும். இவன் நண்பன், இவன் எதிரி என்கிற நிலையெல்லாம் கடந்துபோகுமப்பா. எனவே பாவங்கள் குறைய, குறைய அதை அனுபவத்திலே மனம் உணரும்.

பற்றும், ஆசையும், அகங்காரமும் இருக்கும்வரையில் மனிதனுக்கு எத்தனைதான் இறைவன் கொடுத்தாலும் அதனை நுகருகின்ற தன்மையில்லாமல் போய்விடும். எதை எண்ணியாவது ஒரு மனிதன் கவலைப்படுகிறான். ‘ ஏன் கவலைப்படுகிறாய் ? ‘ என்று கேட்டால் ‘ இதைப்போல் நான் எண்ணுகிறேன். ஆனால் இதைப்போல் நடக்கிறது. பின்னர் எவ்வாறு கவலைப்படாமல் இருப்பது ? ‘ என்று கேட்கிறான். ‘ சரி, கவலைப்படுவதால் உன் பிரச்சினை தீரப்போகிறதா ? ‘ என்று கேட்டால் எந்த மனிதனிடமும் பதில் இல்லை. ஒன்று, முழுமையாக தன் அறிவை பயன்படுத்தி தனக்கு வந்துள்ள துன்பத்தை விலக்கிவிட அவன் முயற்சி செய்யவேண்டும் அல்லது இறைவழியில் வருகின்ற மனிதனாக இருந்தால் ‘ எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார். என் கடமையை அன்றாடம் நேர்மையாக செய்வேன். பிறர் குறித்து எனக்குக் கவலையில்லை ‘ என்ற ரீதியில் ஒரு மனிதன் வாழ்ந்துவிட்டுப் போகவேண்டும். ஆனால் ஒரு மனிதன் சிந்தனையால் தன்னை சித்ரவதை செய்துகொள்வது என்பது ஒருவகையான தண்டனைதான் என்றாலும்கூட இதனை தெளிந்த அறிவுகொண்டு நீக்கிவிடவேண்டும். இவ்வாறு அறிவு பூர்வமான வாதங்களால் ஒரு மனிதனுக்கு எதனையும் புரிய வைக்க இயலாது என்றுதான் கால, காலமாக பக்தி மார்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இரவிலே உறங்குவதற்கு முன்னால் மிதமான உணவு உண்ட பிறகு சிறிது நடை பயிற்சியையும் செய்த பிறகு இறைவனின் திருநாமத்தை, யாருக்கு எந்த நாமம் பிடிக்கிறதோ அதனை முடிந்தவரை உருவேற்றிவிட்டு பிறகு அமைதியான மனதோடு ஒருவன் உறங்க செல்வது நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

இறைவனின் அருளைக்கொண்டு இத்தருணம் இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நல்விதமான சிந்தனைகளும், எண்ணங்களும் மீண்டும், மீண்டும் இறைவன் அருளாலே மாந்தர்கள் மனதிலே பதிந்து, விதி எவ்வாறு இருந்தாலும்  தொடர்ந்து இறை வழியில் வர இறைவனருளால் நல்லாசி கூறுகிறோம்.

ஆசிகள், ஆசிகள், ஆசிகள்.

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு




அகத்திய அடியார்களுக்கு வணக்கம்,

அகத்தியர் பெருமான் ஜீவ நாடியில் உரைத்தது

"ஆவணி மாதம் சூர்யன் ஆட்சி இதனுடன் நெருப்பு கிரகமான செவ்வாய் கூடின 10.8.2019 அன்று முதல் காடுகள் நில தலைவனாகிய மால் மாயோன் நிலத்தில் (காடுகளில்) நெருப்பு  குற்றம் ,மலை சரிவு கடுமையான பாதிப்புகள் உண்டாக ஏதுவாக வரும் ஓர் திங்கள் இது தொடர அபயம் தரும் மாயோன் திருமாலை போற்றி துதி செய்து கார்மேகனிடம் வேண்டுதல் வையுங்கள்.

ஆவணி திருவோணம் (11.09.2019) மிகவும் நல்ல தருணம். நிலம், நீர் ,நெருப்பு இதிலிருந்து உயிர்களை பயிர்களை தருக்களை காக்க ஏக மனதாக திருமாலை போற்றி சங்கல்பம் செய்து காப்பவன் அருளால் நலம் அடையுங்கள்."

ஆகவே அன்பர்களே இந்த மாதம் முழுவதும் பெருமாள் வழிபாடு செய்து இயற்கையை காக்க சங்கல்பம் வைக்க வேண்டுகிறோம்.மாதம் முழுவதும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் ஆவணி திருவோணம் (11.09.2019) அன்றாவது பெருமாள் வழிபாடு செய்ய வேண்டுகிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா  தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக!!!

வெள்ளி, 11 ஜனவரி, 2019

நல்லெண்ணெய்யின் குண நலன் பற்றிய அகத்தியர் குணவாகடம் நூல் குறிப்பு



புத்திநயனக்குளிர்ச்சி பூரிப்பு மேய்ப்புளகஞ்
சத்துவங் கந்தி தனியிளமை - மெத்தவுண்டாங்
கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய்
புண்ணோய்போ மெண்ணெய்யாற் போற்று"
-அகத்தியர் குணவாகடம்

எள் எண்ணையை இரண்டு அல்லது நாலு உச்சிக்கரண்டியளவு ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டு வர, இது புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல்பூரிப்பு, உடல்வன்மை ஆகியவைற்றைத் தருவதோடு கண்ணோய், காதுநோய், தலைக்கொதிப்பு, சொறிசிரங்கு, புண் முதலியவைகளையும் போக்கும், இருமலை தணிக்கும், மனமகிழ்ச்சியைத் தரும்.

திருப்பாம்புரத்தை பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



இராகுவும், கேதுவும் எப்பொழுதுமே சேராதப்பா. இஃதொப்ப நிலையிலே பல்வேறு நாகதோஷங்கள் நீக்குகின்ற ஸ்தலங்களில் திருப்பாம்புரமும் ஒன்று. ஆனால் அங்கும் வழக்கம்போல் பல்வேறு இடைசெருகல்கள் வந்துவிட்டன. எமக்கு ஏதோ சாபம் ஏற்பட்டதாகவும், அங்கு வந்து நீங்கியதாகவும்கூட வாசகங்கள் அங்கே பொறிக்கப்பட்டிருக்கிறது. எது எப்படியாயினும் இதுபோன்ற சாப நிவர்த்தி ஸ்தலங்களிலே பரிபூரண உள்ளத்தோடு வேண்டிக்கொண்டால் கட்டாயம் நல்ல நன்மைகள் நடக்குமப்பா. அது மட்டுமல்ல.

பொதுவாக நாகதோஷம் அல்லது வேறு தோஷங்களுக்கு பிராயச்சித்தம் என்ற பெயரிலே அந்தந்த கிரகங்களுக்கும், கிரக அதி தேவதைகளுக்கும் ப்ரீதி செய்வதோடு அந்த கிரகம் தொடர்பான தர்மங்களையும் செய்ய வேண்டும். இராகு என்றால் விஷம் என்று வைத்துக்கொண்டால் விஷம் நீக்கும் மருந்துகளை வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்யலாம். ஒவ்வாமை நோய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறும் மனிதனுக்கு உதவியை செய்யலாம். குரு ப்ரீதி செய்ய வேண்டியவர்கள், குரு ப்ரீதி பூஜைகள் செய்வதோடு மனித நிலையில் குருவாக இருக்கக்கூடியவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். இவைதான் உண்மையில் குருதோஷம் நீக்குகின்ற உபாயமாகும்.


திருப்பாம்புரம் வரலாறு 



திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

எப்படிப் போவது

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு பாம்பு புரேஸ்வரர் திருக்கோயில்
திருபாம்புரம்
சுரைக்காயூர் அஞ்சல்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 612203

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


தீர்த்த மலை தீர்த்தங்கள் சிறப்புகள் பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



இறைவன் அருளால் பல்வேறுவிதமான தீர்த்தங்கள் அங்கு இருக்கிறது. இராம தீர்த்தம் கூட அங்கு இருக்கிறது. அகஸ்தியர் என்ற நமது நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. ஹனுமன் நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. இதுபோன்ற தீர்த்தங்கள் எல்லாம் இறைவன் அருளாலே காலகாலம் உருவாக்கப்பட்டு மனிதனின் தீராத கொடிய பிணிகளை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள். ஆனாலும்கூட இதுபோன்ற இடங்களில் அநாகரீகமான மனிதர்கள் சென்று பல அனாச்சாரங்களில் ஈடுபட்டால் கட்டாயம் இறைவன் அருளை மாற்றிவிடுவார் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றளவும் பரிசுத்த உள்ளத்தோடு சென்று பரிபூரணமான சரணாகதியோடு இறைவனை வணங்கி அந்த தீர்த்தத்தை அருந்த கட்டாயம் நன்மைகள் உண்டு. கொடும் நோய்கள் தீரும். 

செவ்வாய், 20 நவம்பர், 2018

குற்றாலத்தில் அகத்திய பெருமானுக்கு குரு பூஜை விழா-2018




அகத்தியரின் 9 ம் ஆண்டு அன்னதானம்.

வரும் மார்கழி 11 ஆயில்ய நட்சத்திரம்,
டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதன் கிழமை [26/12 /2018] குற்றாலகூத்தர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தொடர்ந்து ''அன்னதானம்'' நடைபெறவிருக்கிறது.

பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அன்னதானதிற்கு அரிசி,பருப்பு,காய்கறி,இதர பொருட்கள் வழங்கயிருப்பவர்கள்.

cell +919976489898. +919715872838 ஐ
தொடர்பு கொள்ளவும்.

அன்னதானதிற்கு பணமாக வழங்க விருப்பமுள்ளவர்கள் .

Pothigai courtallanathar agathiyar annathana trust, 
a/c 023-502-000000304, 
Indian overseas bank, courtallam.

அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்!

செவ்வாய், 9 அக்டோபர், 2018

காஞ்சிபுரம் கிளார் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு உதவி தேவை


அகத்தியர் அடியார்கள் கவனத்திற்கு,
காஞ்சிபுரம் மாவட்டம்,  கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்காக,அருகாமையில் உள்ள  முசரவாக்கம், பெரும்பாக்கம் மற்றும் பாலுச்செட்டி ,திருப்புகுழி ஆகிய சிற்றூரில் கிராம பொது மக்களால் கைங்கரியம்  வசூலிக்கப்பட்டது. மேலும் திருப்பணி முடிய கைங்கரியம் தேவைப்படுவதால் அடியார்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


வங்கி  கணக்கு விபரம்