வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பாவம் ஓரளவு குறைந்திருக்கிறது என்பதை மனிதர்கள் எப்படி அறிந்து கொள்வது குறித்து அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



பாவங்கள் குறைந்தாலும் அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும்கூட பெருங்காயப் பேழைபோல் அதன் நறுமணம் தாக்கிக்கொண்டேதான் இருக்கும். இருந்தாலும் பாவம் கூடுமானவரை குறைந்திருக்கிறது, மிக, மிக சிறிய அளவுதான் இருக்கிறது என்றால் தன்முனைப்பும், அகங்காரமும் இல்லாமல் போய்விடும். ‘ நான் யார் ? நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன் ? என் வலிமை என்ன ? என்னுடைய செல்வம் என்ன ? என் பதவி என்ன ?  என் செல்வாக்கு என்ன ? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான் ? ‘ என்பது போன்ற எண்ணங்களெல்லாம் மெல்ல, மெல்ல விலகிவிடும். மனம் அமைதியை விரும்பும், கூடுமானவரை தனிமையை விரும்பும். ‘ புரிதல் இல்லாத மனிதர்கள் எது வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். அவன் விதி அவன் அவ்வாறு நடந்துகொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்வோம் ‘ என்ற ரீதியில்தான் மனித மனம் இருக்கும். இவன் நண்பன், இவன் எதிரி என்கிற நிலையெல்லாம் கடந்துபோகுமப்பா. எனவே பாவங்கள் குறைய, குறைய அதை அனுபவத்திலே மனம் உணரும்.

பற்றும், ஆசையும், அகங்காரமும் இருக்கும்வரையில் மனிதனுக்கு எத்தனைதான் இறைவன் கொடுத்தாலும் அதனை நுகருகின்ற தன்மையில்லாமல் போய்விடும். எதை எண்ணியாவது ஒரு மனிதன் கவலைப்படுகிறான். ‘ ஏன் கவலைப்படுகிறாய் ? ‘ என்று கேட்டால் ‘ இதைப்போல் நான் எண்ணுகிறேன். ஆனால் இதைப்போல் நடக்கிறது. பின்னர் எவ்வாறு கவலைப்படாமல் இருப்பது ? ‘ என்று கேட்கிறான். ‘ சரி, கவலைப்படுவதால் உன் பிரச்சினை தீரப்போகிறதா ? ‘ என்று கேட்டால் எந்த மனிதனிடமும் பதில் இல்லை. ஒன்று, முழுமையாக தன் அறிவை பயன்படுத்தி தனக்கு வந்துள்ள துன்பத்தை விலக்கிவிட அவன் முயற்சி செய்யவேண்டும் அல்லது இறைவழியில் வருகின்ற மனிதனாக இருந்தால் ‘ எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார். என் கடமையை அன்றாடம் நேர்மையாக செய்வேன். பிறர் குறித்து எனக்குக் கவலையில்லை ‘ என்ற ரீதியில் ஒரு மனிதன் வாழ்ந்துவிட்டுப் போகவேண்டும். ஆனால் ஒரு மனிதன் சிந்தனையால் தன்னை சித்ரவதை செய்துகொள்வது என்பது ஒருவகையான தண்டனைதான் என்றாலும்கூட இதனை தெளிந்த அறிவுகொண்டு நீக்கிவிடவேண்டும். இவ்வாறு அறிவு பூர்வமான வாதங்களால் ஒரு மனிதனுக்கு எதனையும் புரிய வைக்க இயலாது என்றுதான் கால, காலமாக பக்தி மார்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இரவிலே உறங்குவதற்கு முன்னால் மிதமான உணவு உண்ட பிறகு சிறிது நடை பயிற்சியையும் செய்த பிறகு இறைவனின் திருநாமத்தை, யாருக்கு எந்த நாமம் பிடிக்கிறதோ அதனை முடிந்தவரை உருவேற்றிவிட்டு பிறகு அமைதியான மனதோடு ஒருவன் உறங்க செல்வது நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

இறைவனின் அருளைக்கொண்டு இத்தருணம் இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நல்விதமான சிந்தனைகளும், எண்ணங்களும் மீண்டும், மீண்டும் இறைவன் அருளாலே மாந்தர்கள் மனதிலே பதிந்து, விதி எவ்வாறு இருந்தாலும்  தொடர்ந்து இறை வழியில் வர இறைவனருளால் நல்லாசி கூறுகிறோம்.

ஆசிகள், ஆசிகள், ஆசிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக