வெள்ளி, 11 ஜனவரி, 2019

திருப்பாம்புரத்தை பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



இராகுவும், கேதுவும் எப்பொழுதுமே சேராதப்பா. இஃதொப்ப நிலையிலே பல்வேறு நாகதோஷங்கள் நீக்குகின்ற ஸ்தலங்களில் திருப்பாம்புரமும் ஒன்று. ஆனால் அங்கும் வழக்கம்போல் பல்வேறு இடைசெருகல்கள் வந்துவிட்டன. எமக்கு ஏதோ சாபம் ஏற்பட்டதாகவும், அங்கு வந்து நீங்கியதாகவும்கூட வாசகங்கள் அங்கே பொறிக்கப்பட்டிருக்கிறது. எது எப்படியாயினும் இதுபோன்ற சாப நிவர்த்தி ஸ்தலங்களிலே பரிபூரண உள்ளத்தோடு வேண்டிக்கொண்டால் கட்டாயம் நல்ல நன்மைகள் நடக்குமப்பா. அது மட்டுமல்ல.

பொதுவாக நாகதோஷம் அல்லது வேறு தோஷங்களுக்கு பிராயச்சித்தம் என்ற பெயரிலே அந்தந்த கிரகங்களுக்கும், கிரக அதி தேவதைகளுக்கும் ப்ரீதி செய்வதோடு அந்த கிரகம் தொடர்பான தர்மங்களையும் செய்ய வேண்டும். இராகு என்றால் விஷம் என்று வைத்துக்கொண்டால் விஷம் நீக்கும் மருந்துகளை வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்யலாம். ஒவ்வாமை நோய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறும் மனிதனுக்கு உதவியை செய்யலாம். குரு ப்ரீதி செய்ய வேண்டியவர்கள், குரு ப்ரீதி பூஜைகள் செய்வதோடு மனித நிலையில் குருவாக இருக்கக்கூடியவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். இவைதான் உண்மையில் குருதோஷம் நீக்குகின்ற உபாயமாகும்.


திருப்பாம்புரம் வரலாறு 



திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

எப்படிப் போவது

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு பாம்பு புரேஸ்வரர் திருக்கோயில்
திருபாம்புரம்
சுரைக்காயூர் அஞ்சல்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 612203

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக