திங்கள், 27 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -3



தாயாயுமென்றந்தை  தானாயுநின்று நீ
தானாகவருள்  புரியவும்
தாபந்தமெல்லா மறிந்த நிஷ்டைச்
சகாவென்றவருள்  புரியவும்
நாயடியனுய்பும்  பொருட்டாகரட்சித்து
நாடோறுமருள்  புரியவும்
நச்சுநச்சென்றனைய ரற்றுறெ என்றனை   
நகைத்திடாதருள்  புரியவும்
தூயனேமாயனே  நேயனே தாயனே 
தொழும்புகொண்டருள் புரியவுந்
தோலாவழக்கனிவ னென்றுசொல்லாமெலென்
றுரையேயுனருள்  புரியவும்
வாய்மொழிமறக்கும்முன் றவராஜசிங்கமே     
வரவேண்டுமென்றனருகே
மாகுணங்குடிவாழு  மென்னகத்தீசனே

பொருள்:

எனக்கு தாயாகவும் ,தந்தையாகவும் நின்று தானாக அருள்  புரியவும்,புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தாங்கள் அறிந்த தியானத்தில் சங்கடம் இல்லாமல் வாசியே எனக்கு நண்பனாக  அருள்  புரியவும்,நாய்  போன்ற அடியேனையும் ஒரு  பொருட்டாக ஏற்று ரட்சித்து நாள்தோறும் அருள்  புரியவும்,நச்சு,நச்சு என்று புலம்புகின்ற என்னை பார்த்து சிரிக்காமல் அருள்  புரியவும் ,தூய்மை ஆனவரே,மாய தோற்றம் கொண்டவரே  ,அன்புள்ளம் கொண்டவரே ,தாய் போன்றவரே,உன் அடியார் கூட்டத்தில் என்னை ஆட்கொண்டு சேர்த்து அருள் புரியவும்,தீராத வழக்கு கொண்டவன் சொல்லி என்னை ஒதுக்காமல் என் துரையே அருள் புரியவும்,உண்மையான மொழியால் அடியேன் பாடியவை யாவும் மறக்கும் முன் தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -2



என் தலையிட்ட விதி என்னமோ என்னநான்
இடையாமல் அருள் புரியவும்
என் செய்தேன் என்றடிமை எண்ணாத எண்ணங்கள்
எண்ணாமல் அருள் புரியவும்
பந்தமதில் இட்ட மெழுகு என்னை நெஞ்சுருகிப்
பதைத்திடாது அருள் புரியவும்
பாவி ஆகாது என கருணை நயனம் கொண்டு
பார்த்து நல் அருள் புரியவும்
மந்திரம் கொண்டு மாங்காய் விழாது ஆதலான்
மனம் உவந்து அருள் புரியவும்
மாரியினும்  நின் கருணை மாறி அணுமாறாது
வருஷிக்க  அருள் புரியவும்
வந்து பணிவார்க்கு உதவு மெய் தவராஜ சிங்கமே
வரவேண்டும் எந்தன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மௌன தேசிக நாதனே

பொருள்

என் தலையில்  எழுதப் பட்ட  விதி என்னவாக இருந்தாலும் அடியேனுக்கு அருள் புரியவும், அடியேன்  என்ன செய்தேன் என்று எண்ணங்களால் எண்ணிப் பார்க்காது அருள் புரியவும், மெழுகு போன்ற பந்தத்தில் இடப் பட்ட என்னை மெழுகாகப்பட்டது நெருப்பால் உருகிப் போவது போல் பதைத்திடாது அருள் புரியவும்,என்னை பஞ்சமாபாதகம் செய்த பாவி என்று ஆகாது என ஒதுக்காமல் நின் கருணை பார்வை கொண்டு பார்த்து நல் அருள் புரியவும்,வெறும் மந்திரம் சொன்னால் மாங்காய் பால் என்ற அமிர்தம் சகஸ்ரஹாரத்தில் இருந்து சுரக்காது மற்றும் நின் கருணையால் அது கூடும் என்று சித்தாதி சித்தர்கள்,தேவர்கள்,ரிஷிகள் நினைப் பணிந்தனர், ஆதலால் மனம் உவந்து அருள் புரியவும்,மேகத்திலிருந்து பொழியும் நீரின் தன்மை அணு அளவு கூட எப்படி மாறதோ அது போல் அடியேனும் கருணை மழை  பொழிந்து  அருள் புரியவும் ,உன்னை வந்து பணிபவர்களுக்கு எல்லாம்  உதவுகின்ற சத்தியமாகிய,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

 


செவ்வாய், 21 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை


குருவருள் நிலை

தாய் அனைய இன்பம்தனைந் தந்து தந்துகை
தழுவி நின்று அருள் புரியவும்
தந்தை தாயும் தானே ஆகவும் இருந்து எனைத்
தற்காத்து உன் அருள் புரியவும்
சேய் என்று இரங்கி அனைகாலியின் கன்றுஎனச்
சீராட அருள் புரியவும்
செங்கீரை ஆடு சிறுமதலை போல் கொஞ்சிநான்
செல்வம் இட அருள் புரியவும்
பாயும் மடை கால் கண்டு கரைபுரள வரும் மதிப்
பால் கொடுத்து அருள் புரியவும்
பக்குவத்தோடு மவுனத் தொட்டிலுக்குள்
படுக்க வைத்து அருள் புரியவும் 
வாயுவை கட்டவும் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே

பொருள்:

ஒரு தாயாகப்பட்டவள் ஓர் குழந்தையை அணைத்தால் எவ்வளவு இன்பம் ஏற்படுமோ அதுபோல் எனக்கு கை தந்து அருள் புரியவும்,தந்தை மற்றும் தாயாகவும் இருந்து என்னை காப்பாற்றி  அருள் புரியவும்,ஒரு பசுவாகப்பட்டது எப்படி கன்றை  குழந்தையாக  கொள்வதுபோல் அடியேனை  ஏற்று சீராட்டி அருள் புரியவும்,செங்கீரை பருவமான ஐந்தாவது மாதத்தில் ஒரு குழந்தை தன் தலையை இங்குமங்கும் அசைத்தாடுவது போல செல்வத்தை கேட்போருக்கு இட அருள் புரியவும்,நீர்நிலை களில் மடையை திறந்தவுடன் நீராகப்பட்டது எப்படி கரைபுரண்டு ஓடுமோ அதுபோல் அடியேனுக்கு ஞானப் பால் கொடுத்து 
அருள் புரியவும்,பக்குவத்தோடு மவுனம் என்ற தொட்டிலுக்குள் அடியேனை படுக்கவைத்து அருள் புரியவும்,வாசியை நடுநாடியில் செலுத்த அருள் புரியவும் ,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.


திங்கள், 20 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம்





குரு வணக்கம் 

குணங்குடியார் நற்குணங்குடி ஓங்கக் 
கொடு கொடு என்று அடிக்கடி குணங்குங்
குணங்குடியார் துர்க்குணங்குடி போகக்
குணமெலாம் திரண்டு அருள் பரப்பிப்
குணங்குடி ஏறிக்  குறைவற  நிறைந்து
குணக் கடலான மெய்ஞ்ஞானக்
குணங்குடி வாழும் என் அகத்தீசனாம் என்
குருபதம் சிரத்தின் மேல் கொள்வாம்

பொருள்:

என்னிடம் உள்ள நற்குணங்கள்  ஓங்கவும் ,தீயகுணங்கள் போகவும்,குணமெலாம் திரண்டு அருள் பரப்பி  குணங்குடியில் ஏறி என் குறைகள் எல்லாம் குறைவறச் செய்து குணக்கடலான என் குருநாதர் அகத்தீசர் குருபதத்தை சிரத்தின் மேல் கொள்வோம்.



வெள்ளி, 27 மார்ச், 2020

சித்தரடியார்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்





கோவில்கள் அனைத்தும் அடியார்கள் நுழைய வாய்ப்பில்லாத இந்த சூழ்நிலையில் , சித்தரடியார்கள் அவரவர் தத்தம் இல்லங்களில் இருந்து கொண்டே வெட்ட வெளியில் (வாசலிலோ அல்லது மொட்டை மாடியிலோ)  தீபம் ஏற்றி இப்போது உள்ள அசாதாரமான சூழ்நிலை மாற வேண்டும் என்று அவரவர் குருமார்களை துதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

வெட்ட வெளி தீபத்தின் மகத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள் சித்தர் பெருமக்களே !!!
அதன் மகத்துவத்தை அவர்கள் அடியார்களான நாமும் உணர வேண்டி இது வெளிப்படுத்தப் படுகிறது.

சனி, 28 டிசம்பர், 2019

கேரளா வழியாக அகஸ்தியர் கூடம் செல்ல ஜனவரி 8ல் முன்பதிவு ஆரம்பம்.கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு


அகஸ்திய முனிவர் தவம் செய்த அகஸ்தியர் கூடம் கடல் மட்டத்திலிருந்து 1890 மீட்டர் உயரத்தில் உள்ளது .மேற்கு தொடர்சி மலையில் கேரள வனப் பகுதியான நெய்யார் வனப் பகுதியில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் போனக்காடு வன எல்லையிலிருந்து 56 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு பகுதியான மலை ஏறி சன்னதி செல்ல வேண்டும். வருடத்தில் சிவராத்திரி நாள் ஆதிவாசி மக்கள் வழங்கும் சிறப்பு பூஜை பிரசத்தி பெற்றதாகும். சிவராத்திரிக்கு முன்னதாக குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இப்பகுதிக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவர்.

  2020ம்  ஆண்டிற்கான அகஸ்தியர் கூட புண்ணிய யாத்திரை தற்போது ஆரம்பிக்க உள்ளது. கேரள வனத்துறை அனுமதி பெற்றவர்களை மட்டுமே மலை ஏற முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதியும், காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில் வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது. தினம் 100 பேருக்கு  மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறை பணியாளர் தலைமையில் பயணிக்க வேண்டும்.

2020ம்  ஆண்டிற்கான அகஸ்தியர் கூட புண்ணிய யாத்திரை தற்போது ஆரம்பிக்க உள்ளது. கேரள வனத்துறை அனுமதி பெற்றவர்களை மட்டுமே மலை ஏற முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதியும், காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில் வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது. தினம் 100 பேருக்கு  மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறை பணியாளர் தலைமையில் பயணிக்க வேண்டும்.


மிகவும் கடினமான  அகஸ்தியர் கூடம் புண்ணிய யாத்திரைக்கு பெண்கள்  அனுமதி இல்லை 

இதற்க்கு முன் பதிவு வரும் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி காலை 11:00 மணி முதல் துவங்குகிறது.






ஆகிய இணைய தளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய கால அவகாசம் உள்ளதால் முன்கூட்டியே தங்கள் கணக்கை பதிந்து வைத்து விடவும்.பின்னர் முன்பதிவு செய்யும் நாளில் உடனடியாக முன்பதிவு செய்யலாம்.  


கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு  



 கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 10 வரை நடை பெறும்.

  • அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும் 
  • புகை பிடிப்பது மற்றும் மது அருந்துதல் தடை செய்யப் பட்டுள்ளது 
  • பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு  அனுமதி இல்லை 
  •  ஒன்று முதல் ஐந்து நபர்களுக்கு 50ரூபாய் கட்டணம் (ஒரு தலைக்கு) 
  • பத்துக்கு மேற்பட்ட   நபர்களுக்கு 70ரூபாய் கட்டணம்  (ஒரு தலைக்கு) 
  • பத்துக்கு மேற்பட்ட  நபர்களுக்கு அல்லது குழுவாக வருபவர்களுக்கு கைடு வசதி செய்து தரப்படும். 
  • ஒரே நபரே மொத்த குழுவிற்கும் பதிவு செய்யலாம். 
  • தனி நபர் என்றால் 1,100/- கட்டணம்
உதவிக்கு 0471-2360762 என்ற என்னை அழைக்கலாம்.

-நன்றி :கேரள வனத்துறை.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

திருக்கழுகுன்றம் அபூர்வ சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு



சித்தர்கள் கிரிவலம் பற்றி அகஸ்திய மஹாகுருவின் அருள்வாக்கு !!!


மறைவணங்கும் இறைவணங்கி உரைக்கிறேன் அகத்தியன் யான் இத்தருணத்திலே...


சகல சக்திகளுக்கும் ஆதாரமாய் விளங்குகின்ற இறைவனவன். அந்த சக்தியானது புவி முழுவதும் பரவியிருக்கின்ற சக்தி ஓர் ஆலயத்தில் நிலைபெற்று இருக்கின்ற பொழுது, அந்த ஆலயத்தில் மிக மிக அற்புதங்களைக் கொண்ட கதிர்வீச்சு சக்தியானது எப்போது மிக அதீத சக்தியோடு வெளிப்படுகிறதோ அந்த நேரத்தில் சித்தர்கள் நாங்கள் அந்த இறையை தொழுக கூடுவோம். 


இந்த தேசத்தில் உள்ள அணைத்து ஆலயங்களிலும் இந்த நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தாலும், கழுகு தொழுகின்ற, ஈசனவன் வீற்றிருக்கின்ற வேதகிரீஸ்வரர் பெருமானுடைய மலையில், பல ஆயிரக்கணக்கான சித்தர் சமாதிகள் இருந்தாலும், அத்தனையும் விழிப்படைகின்ற அற்புதமான நாளாகிய மார்கழி மாதம் நன்னாளில், இந்த திவ்யமான இறையை தரிசனம் செய்ய சித்தகணங்கள் ஆகிய நாங்கள் இத்தலத்திற்கு வருகின்றோம். வருகின்ற நன்னாளில் யாங்கள் கிரிவலம் வருகின்ற பாதையில் எவரொருவர் நின்று தரிசனம் செய்கின்றார்களோ அவர்களுடைய கர்மவினைகள் யாவும் அறும் என்பது அகத்தியன் வாக்கடா கருணையே. 


கருணையே ஆதியோடு அங்கமாக இருக்கின்ற பல லட்சக்கணக்கான சித்தகணங்கள் வருகின்ற நேரத்தை யாங்கள் உங்களோடு பகிர்கின்றோம் அப்பா. நள்ளிரவு நான்கென்று அழைக்கப்படுகின்ற நாளில் துல்லியமான வேளையத்தனில் யாங்கள் இத்தலத்திற்கு கிரிவலம் செய்கின்றோம்.


மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்ற மாந்தரும் சரி, உடல் நலம் குன்றிய மாந்தரும் சரி, தடத்தின் போது கிரிவலம் செய்தால் இறைசக்தியின் மூலம் அன்னவன் ஆன்மபலம் பெற்று நிலைபெறுவான் என்பது அருள்வாக்கடா மைந்தனே. 


ஆசிகள் சுபம்!


ஸ்ரீ மஹா குரு அகத்திய பெருமானின் கருணை ஜீவ நாடியில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரர் திருமலையை சித்தர்கள் கிரிவலம் வரும் நாளும் நேரமும் உலக நன்மைக்காக அருளப்படுகிறது.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய மலைகளாக இருக்கப் பெற்றதான வேத மலையில் உள்ள வேதகிரீஸ்வரர் பெருமானை சித்த மஹா புருஷர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வணங்கி செல்லும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

அபூர்வ சித்தர்கள் கிரிவலம் குறித்து உலக நலனுக்காக அகத்திய பெருமான் காட்டிய வழியில் செல்பவரும், பல ஆயிரக்கணக்கான லிங்கங்களை பிரதிஷ்டை செய்தும், உலக நன்மைக்காக அருளிய அகத்திய மஹா யாகங்களையும், தீமைகள் அறுதல் பொருட்டு ருத்ர சண்டி பைரவ யாகங்களை நிகழ்த்தியும், கும்பமுனி வாக்கிற்கு இணங்க ஈசன் பணிக்காக தன் வாழ்வினை அர்பணித்தவரும் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாளின் வாக்கினை ஒத்த பல நூற்றாண்டுகளாக புதையுண்டு பூசை அற்று கிடக்கும் ஈசனின் திருமேனிகளுக்கு (சிவலிங்கம்) புனருத்தாரணம் செய்து வருபவரும், பல லட்சக்கணக்காண மக்களுக்கு அன்ன தானமும் வஸ்திர தானமும் செய்து உலக நன்மைக்காக பணியாற்றும் திருக்கழுகுன்றம் அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன் ஐயா அவர்கள் சித்தர்கள் கிரிவலம் வரும் நாளை உலகிற்கு உரைத்து இருக்கிறார்கள்.

நாள் : 4.1.2020
கிழமை / நேரம் : சனிக்கிழமை இரவு 2.53 AM துவங்கி 3.17 AM வரை

பாவங்களை போக்கும் சித்தர் கிரிவலம் நடக்க இருக்கிறது.

பல நூற்றுக்கணக்கான சித்தர் பெருமக்கள், நட்சத்திர மண்டல தேவதைகள், நதி தேவதைகள், விருத சுதன் எனும் கழுகுகள், தேவாதி தேவர்கள் , அஸ்வினி தேவர்கள் (அசத்தியம் இல்லாதவர் ஆன நாசத்ய மற்றும் ஒளி வீசும் தன்மை கொண்டவரான தஸ்ரா), வசிட்டரின் மனைவியான அருந்ததி தேவி, மாதொருபாகன் என்ற அர்த்தநாரீசுவரர் மூர்த்தம் தோன்ற காரணமான பிருங்கி, இறப்பில்லா மகாயோகியும் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்தவருமான கோரக்கர், சிவபெருமானின் வாகனம் ஆனவரும், கயிலாய உலகின் வாயிற்காவலராகவும் விளங்கும் நந்தி தேவர், போகரின் சீடரான கமலமுனி, பிரம்மா தன் மனதால் நினைத்த போது தோன்றிய புதல்வர்களில் ஒருவரான புலத்தியர், ரிக் வேத கால முனிவர்களில் ஒருவரும் ஏழு முனிவர்களில் ஒருவரும் ஆன அத்ரி, ரிக்வேதத்தில் 20 சூக்தங்களைச் செய்துள்ளவரும் சப்தரிஷிகளில் ஒருவருமான கௌதமர், முருகனின் அம்சமான கௌமாரி, குளியாமல் இருக்கும் பொழுதும் எப்பொழுதும் வாசம் வீசிக் கொண்டே இருக்கும் பரிமள சித்தர், மனமாகிய பேயை வென்றவரான அகப்பேய் சித்தர், பத்ரி கோஷ்ட சித்தர், ரோமச முனிவரின் தந்தையும் வசிஷ்ட்டரால் தன் எட்டாம் பிறப்பில் ஞானம் வழங்கப் பெற்றவரும் ஆன காகபுஜண்டர், நவநாத சித்தர்கள், அகத்தியரால் ஒளி தேகம் பெற்ற எண்ணிலா கோடி சித்தர்கள் ஆகியோருடன்  கனகசித்தரும், தன்னால் இப்பிரபஞ்சமும் உயிர்களும் எல்லா காலமும் காக்கப்பட வேண்டும் என்பதில் நிலையாக உள்ளவரும், அருளப் பெற்றவர்களுக்காக பிரம்மனிடம் போராடி வரங்களைப் பெற்றுத் தருபவரும், சதா சர்வகாலமும் ஈசனையும் அன்னையையும் வணங்குபவராகவும் ஆன அகஸ்திய மகரிஷி லோப முத்ரா தேவியுடன் வேதகிரிஸ்வரர் பெருமானை வணங்கி சூட்சம கிரிவலம் வர இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வின் பொருட்டு அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன் ஐயா அவர்கள் தலைமையில் சனிக்கிழமை இரவு 2.00 மணிக்கு வேதகிரீஸ்வரர் திருமலை அடிவாரத்தில் வேத கோஷங்கள் முழங்க சித்தர்களுக்கு ஆரத்தி நடைபெற்று அதனைத் தொடர்ந்து மௌன கிரிவலம் நிகழ உள்ளது.

இந்த சித்தர் கிரிவலம் வரும் போது சித்தர்கள் சூட்சமான ரூபத்தில் வலம் வருவார்கள்.அவ்வாறு வரும் போது அவர்களின் சூட்சம தேகம் நம்மீது படுவதனால் நோயுற்றோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், மன நலம் பாதிக்கப்பட்டோர் , திருமணத் தடை உடையோர், குழந்தைப் பேறு இன்மை கொண்டோர் மற்றும் தீராத கர்ம வினைகள் கொண்டோர்கள் ஜீவ காந்த பாதையில் வருவதால் சித்தர்கள் ஒளியானது நமது உடலில் ஊடுறுவி பல எண்ணில் அடங்கா நன்மைகள் உண்டாகி குறைகள் விலகும்.

மௌனமாக கிரிவலம் வருதலும்,ஆண்கள் மேலாடை இன்றி கிரிவலம் வருதலும் உத்தமம்

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் நலமடைய சித்தர்களின் கருணையால் நடக்கும் இந்த சித்தர்கள் கிரிவலத்தில் பங்கு கொண்டு அருள் பெறுவோம்.

இவன்
அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன்
(FB)அகத்திய கிருபா, திருக்கழுகுன்றம்
97895 60249, 90431 49096