செவ்வாய், 21 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை


குருவருள் நிலை

தாய் அனைய இன்பம்தனைந் தந்து தந்துகை
தழுவி நின்று அருள் புரியவும்
தந்தை தாயும் தானே ஆகவும் இருந்து எனைத்
தற்காத்து உன் அருள் புரியவும்
சேய் என்று இரங்கி அனைகாலியின் கன்றுஎனச்
சீராட அருள் புரியவும்
செங்கீரை ஆடு சிறுமதலை போல் கொஞ்சிநான்
செல்வம் இட அருள் புரியவும்
பாயும் மடை கால் கண்டு கரைபுரள வரும் மதிப்
பால் கொடுத்து அருள் புரியவும்
பக்குவத்தோடு மவுனத் தொட்டிலுக்குள்
படுக்க வைத்து அருள் புரியவும் 
வாயுவை கட்டவும் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே

பொருள்:

ஒரு தாயாகப்பட்டவள் ஓர் குழந்தையை அணைத்தால் எவ்வளவு இன்பம் ஏற்படுமோ அதுபோல் எனக்கு கை தந்து அருள் புரியவும்,தந்தை மற்றும் தாயாகவும் இருந்து என்னை காப்பாற்றி  அருள் புரியவும்,ஒரு பசுவாகப்பட்டது எப்படி கன்றை  குழந்தையாக  கொள்வதுபோல் அடியேனை  ஏற்று சீராட்டி அருள் புரியவும்,செங்கீரை பருவமான ஐந்தாவது மாதத்தில் ஒரு குழந்தை தன் தலையை இங்குமங்கும் அசைத்தாடுவது போல செல்வத்தை கேட்போருக்கு இட அருள் புரியவும்,நீர்நிலை களில் மடையை திறந்தவுடன் நீராகப்பட்டது எப்படி கரைபுரண்டு ஓடுமோ அதுபோல் அடியேனுக்கு ஞானப் பால் கொடுத்து 
அருள் புரியவும்,பக்குவத்தோடு மவுனம் என்ற தொட்டிலுக்குள் அடியேனை படுக்கவைத்து அருள் புரியவும்,வாசியை நடுநாடியில் செலுத்த அருள் புரியவும் ,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக