செவ்வாய், 10 டிசம்பர், 2019

திருக்கழுகுன்றம் அபூர்வ சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு



சித்தர்கள் கிரிவலம் பற்றி அகஸ்திய மஹாகுருவின் அருள்வாக்கு !!!


மறைவணங்கும் இறைவணங்கி உரைக்கிறேன் அகத்தியன் யான் இத்தருணத்திலே...


சகல சக்திகளுக்கும் ஆதாரமாய் விளங்குகின்ற இறைவனவன். அந்த சக்தியானது புவி முழுவதும் பரவியிருக்கின்ற சக்தி ஓர் ஆலயத்தில் நிலைபெற்று இருக்கின்ற பொழுது, அந்த ஆலயத்தில் மிக மிக அற்புதங்களைக் கொண்ட கதிர்வீச்சு சக்தியானது எப்போது மிக அதீத சக்தியோடு வெளிப்படுகிறதோ அந்த நேரத்தில் சித்தர்கள் நாங்கள் அந்த இறையை தொழுக கூடுவோம். 


இந்த தேசத்தில் உள்ள அணைத்து ஆலயங்களிலும் இந்த நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தாலும், கழுகு தொழுகின்ற, ஈசனவன் வீற்றிருக்கின்ற வேதகிரீஸ்வரர் பெருமானுடைய மலையில், பல ஆயிரக்கணக்கான சித்தர் சமாதிகள் இருந்தாலும், அத்தனையும் விழிப்படைகின்ற அற்புதமான நாளாகிய மார்கழி மாதம் நன்னாளில், இந்த திவ்யமான இறையை தரிசனம் செய்ய சித்தகணங்கள் ஆகிய நாங்கள் இத்தலத்திற்கு வருகின்றோம். வருகின்ற நன்னாளில் யாங்கள் கிரிவலம் வருகின்ற பாதையில் எவரொருவர் நின்று தரிசனம் செய்கின்றார்களோ அவர்களுடைய கர்மவினைகள் யாவும் அறும் என்பது அகத்தியன் வாக்கடா கருணையே. 


கருணையே ஆதியோடு அங்கமாக இருக்கின்ற பல லட்சக்கணக்கான சித்தகணங்கள் வருகின்ற நேரத்தை யாங்கள் உங்களோடு பகிர்கின்றோம் அப்பா. நள்ளிரவு நான்கென்று அழைக்கப்படுகின்ற நாளில் துல்லியமான வேளையத்தனில் யாங்கள் இத்தலத்திற்கு கிரிவலம் செய்கின்றோம்.


மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்ற மாந்தரும் சரி, உடல் நலம் குன்றிய மாந்தரும் சரி, தடத்தின் போது கிரிவலம் செய்தால் இறைசக்தியின் மூலம் அன்னவன் ஆன்மபலம் பெற்று நிலைபெறுவான் என்பது அருள்வாக்கடா மைந்தனே. 


ஆசிகள் சுபம்!


ஸ்ரீ மஹா குரு அகத்திய பெருமானின் கருணை ஜீவ நாடியில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரர் திருமலையை சித்தர்கள் கிரிவலம் வரும் நாளும் நேரமும் உலக நன்மைக்காக அருளப்படுகிறது.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய மலைகளாக இருக்கப் பெற்றதான வேத மலையில் உள்ள வேதகிரீஸ்வரர் பெருமானை சித்த மஹா புருஷர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வணங்கி செல்லும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

அபூர்வ சித்தர்கள் கிரிவலம் குறித்து உலக நலனுக்காக அகத்திய பெருமான் காட்டிய வழியில் செல்பவரும், பல ஆயிரக்கணக்கான லிங்கங்களை பிரதிஷ்டை செய்தும், உலக நன்மைக்காக அருளிய அகத்திய மஹா யாகங்களையும், தீமைகள் அறுதல் பொருட்டு ருத்ர சண்டி பைரவ யாகங்களை நிகழ்த்தியும், கும்பமுனி வாக்கிற்கு இணங்க ஈசன் பணிக்காக தன் வாழ்வினை அர்பணித்தவரும் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாளின் வாக்கினை ஒத்த பல நூற்றாண்டுகளாக புதையுண்டு பூசை அற்று கிடக்கும் ஈசனின் திருமேனிகளுக்கு (சிவலிங்கம்) புனருத்தாரணம் செய்து வருபவரும், பல லட்சக்கணக்காண மக்களுக்கு அன்ன தானமும் வஸ்திர தானமும் செய்து உலக நன்மைக்காக பணியாற்றும் திருக்கழுகுன்றம் அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன் ஐயா அவர்கள் சித்தர்கள் கிரிவலம் வரும் நாளை உலகிற்கு உரைத்து இருக்கிறார்கள்.

நாள் : 4.1.2020
கிழமை / நேரம் : சனிக்கிழமை இரவு 2.53 AM துவங்கி 3.17 AM வரை

பாவங்களை போக்கும் சித்தர் கிரிவலம் நடக்க இருக்கிறது.

பல நூற்றுக்கணக்கான சித்தர் பெருமக்கள், நட்சத்திர மண்டல தேவதைகள், நதி தேவதைகள், விருத சுதன் எனும் கழுகுகள், தேவாதி தேவர்கள் , அஸ்வினி தேவர்கள் (அசத்தியம் இல்லாதவர் ஆன நாசத்ய மற்றும் ஒளி வீசும் தன்மை கொண்டவரான தஸ்ரா), வசிட்டரின் மனைவியான அருந்ததி தேவி, மாதொருபாகன் என்ற அர்த்தநாரீசுவரர் மூர்த்தம் தோன்ற காரணமான பிருங்கி, இறப்பில்லா மகாயோகியும் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்தவருமான கோரக்கர், சிவபெருமானின் வாகனம் ஆனவரும், கயிலாய உலகின் வாயிற்காவலராகவும் விளங்கும் நந்தி தேவர், போகரின் சீடரான கமலமுனி, பிரம்மா தன் மனதால் நினைத்த போது தோன்றிய புதல்வர்களில் ஒருவரான புலத்தியர், ரிக் வேத கால முனிவர்களில் ஒருவரும் ஏழு முனிவர்களில் ஒருவரும் ஆன அத்ரி, ரிக்வேதத்தில் 20 சூக்தங்களைச் செய்துள்ளவரும் சப்தரிஷிகளில் ஒருவருமான கௌதமர், முருகனின் அம்சமான கௌமாரி, குளியாமல் இருக்கும் பொழுதும் எப்பொழுதும் வாசம் வீசிக் கொண்டே இருக்கும் பரிமள சித்தர், மனமாகிய பேயை வென்றவரான அகப்பேய் சித்தர், பத்ரி கோஷ்ட சித்தர், ரோமச முனிவரின் தந்தையும் வசிஷ்ட்டரால் தன் எட்டாம் பிறப்பில் ஞானம் வழங்கப் பெற்றவரும் ஆன காகபுஜண்டர், நவநாத சித்தர்கள், அகத்தியரால் ஒளி தேகம் பெற்ற எண்ணிலா கோடி சித்தர்கள் ஆகியோருடன்  கனகசித்தரும், தன்னால் இப்பிரபஞ்சமும் உயிர்களும் எல்லா காலமும் காக்கப்பட வேண்டும் என்பதில் நிலையாக உள்ளவரும், அருளப் பெற்றவர்களுக்காக பிரம்மனிடம் போராடி வரங்களைப் பெற்றுத் தருபவரும், சதா சர்வகாலமும் ஈசனையும் அன்னையையும் வணங்குபவராகவும் ஆன அகஸ்திய மகரிஷி லோப முத்ரா தேவியுடன் வேதகிரிஸ்வரர் பெருமானை வணங்கி சூட்சம கிரிவலம் வர இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வின் பொருட்டு அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன் ஐயா அவர்கள் தலைமையில் சனிக்கிழமை இரவு 2.00 மணிக்கு வேதகிரீஸ்வரர் திருமலை அடிவாரத்தில் வேத கோஷங்கள் முழங்க சித்தர்களுக்கு ஆரத்தி நடைபெற்று அதனைத் தொடர்ந்து மௌன கிரிவலம் நிகழ உள்ளது.

இந்த சித்தர் கிரிவலம் வரும் போது சித்தர்கள் சூட்சமான ரூபத்தில் வலம் வருவார்கள்.அவ்வாறு வரும் போது அவர்களின் சூட்சம தேகம் நம்மீது படுவதனால் நோயுற்றோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், மன நலம் பாதிக்கப்பட்டோர் , திருமணத் தடை உடையோர், குழந்தைப் பேறு இன்மை கொண்டோர் மற்றும் தீராத கர்ம வினைகள் கொண்டோர்கள் ஜீவ காந்த பாதையில் வருவதால் சித்தர்கள் ஒளியானது நமது உடலில் ஊடுறுவி பல எண்ணில் அடங்கா நன்மைகள் உண்டாகி குறைகள் விலகும்.

மௌனமாக கிரிவலம் வருதலும்,ஆண்கள் மேலாடை இன்றி கிரிவலம் வருதலும் உத்தமம்

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் நலமடைய சித்தர்களின் கருணையால் நடக்கும் இந்த சித்தர்கள் கிரிவலத்தில் பங்கு கொண்டு அருள் பெறுவோம்.

இவன்
அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன்
(FB)அகத்திய கிருபா, திருக்கழுகுன்றம்
97895 60249, 90431 49096

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக