திங்கள், 27 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -3



தாயாயுமென்றந்தை  தானாயுநின்று நீ
தானாகவருள்  புரியவும்
தாபந்தமெல்லா மறிந்த நிஷ்டைச்
சகாவென்றவருள்  புரியவும்
நாயடியனுய்பும்  பொருட்டாகரட்சித்து
நாடோறுமருள்  புரியவும்
நச்சுநச்சென்றனைய ரற்றுறெ என்றனை   
நகைத்திடாதருள்  புரியவும்
தூயனேமாயனே  நேயனே தாயனே 
தொழும்புகொண்டருள் புரியவுந்
தோலாவழக்கனிவ னென்றுசொல்லாமெலென்
றுரையேயுனருள்  புரியவும்
வாய்மொழிமறக்கும்முன் றவராஜசிங்கமே     
வரவேண்டுமென்றனருகே
மாகுணங்குடிவாழு  மென்னகத்தீசனே

பொருள்:

எனக்கு தாயாகவும் ,தந்தையாகவும் நின்று தானாக அருள்  புரியவும்,புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தாங்கள் அறிந்த தியானத்தில் சங்கடம் இல்லாமல் வாசியே எனக்கு நண்பனாக  அருள்  புரியவும்,நாய்  போன்ற அடியேனையும் ஒரு  பொருட்டாக ஏற்று ரட்சித்து நாள்தோறும் அருள்  புரியவும்,நச்சு,நச்சு என்று புலம்புகின்ற என்னை பார்த்து சிரிக்காமல் அருள்  புரியவும் ,தூய்மை ஆனவரே,மாய தோற்றம் கொண்டவரே  ,அன்புள்ளம் கொண்டவரே ,தாய் போன்றவரே,உன் அடியார் கூட்டத்தில் என்னை ஆட்கொண்டு சேர்த்து அருள் புரியவும்,தீராத வழக்கு கொண்டவன் சொல்லி என்னை ஒதுக்காமல் என் துரையே அருள் புரியவும்,உண்மையான மொழியால் அடியேன் பாடியவை யாவும் மறக்கும் முன் தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -2



என் தலையிட்ட விதி என்னமோ என்னநான்
இடையாமல் அருள் புரியவும்
என் செய்தேன் என்றடிமை எண்ணாத எண்ணங்கள்
எண்ணாமல் அருள் புரியவும்
பந்தமதில் இட்ட மெழுகு என்னை நெஞ்சுருகிப்
பதைத்திடாது அருள் புரியவும்
பாவி ஆகாது என கருணை நயனம் கொண்டு
பார்த்து நல் அருள் புரியவும்
மந்திரம் கொண்டு மாங்காய் விழாது ஆதலான்
மனம் உவந்து அருள் புரியவும்
மாரியினும்  நின் கருணை மாறி அணுமாறாது
வருஷிக்க  அருள் புரியவும்
வந்து பணிவார்க்கு உதவு மெய் தவராஜ சிங்கமே
வரவேண்டும் எந்தன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மௌன தேசிக நாதனே

பொருள்

என் தலையில்  எழுதப் பட்ட  விதி என்னவாக இருந்தாலும் அடியேனுக்கு அருள் புரியவும், அடியேன்  என்ன செய்தேன் என்று எண்ணங்களால் எண்ணிப் பார்க்காது அருள் புரியவும், மெழுகு போன்ற பந்தத்தில் இடப் பட்ட என்னை மெழுகாகப்பட்டது நெருப்பால் உருகிப் போவது போல் பதைத்திடாது அருள் புரியவும்,என்னை பஞ்சமாபாதகம் செய்த பாவி என்று ஆகாது என ஒதுக்காமல் நின் கருணை பார்வை கொண்டு பார்த்து நல் அருள் புரியவும்,வெறும் மந்திரம் சொன்னால் மாங்காய் பால் என்ற அமிர்தம் சகஸ்ரஹாரத்தில் இருந்து சுரக்காது மற்றும் நின் கருணையால் அது கூடும் என்று சித்தாதி சித்தர்கள்,தேவர்கள்,ரிஷிகள் நினைப் பணிந்தனர், ஆதலால் மனம் உவந்து அருள் புரியவும்,மேகத்திலிருந்து பொழியும் நீரின் தன்மை அணு அளவு கூட எப்படி மாறதோ அது போல் அடியேனும் கருணை மழை  பொழிந்து  அருள் புரியவும் ,உன்னை வந்து பணிபவர்களுக்கு எல்லாம்  உதவுகின்ற சத்தியமாகிய,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

 


செவ்வாய், 21 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை


குருவருள் நிலை

தாய் அனைய இன்பம்தனைந் தந்து தந்துகை
தழுவி நின்று அருள் புரியவும்
தந்தை தாயும் தானே ஆகவும் இருந்து எனைத்
தற்காத்து உன் அருள் புரியவும்
சேய் என்று இரங்கி அனைகாலியின் கன்றுஎனச்
சீராட அருள் புரியவும்
செங்கீரை ஆடு சிறுமதலை போல் கொஞ்சிநான்
செல்வம் இட அருள் புரியவும்
பாயும் மடை கால் கண்டு கரைபுரள வரும் மதிப்
பால் கொடுத்து அருள் புரியவும்
பக்குவத்தோடு மவுனத் தொட்டிலுக்குள்
படுக்க வைத்து அருள் புரியவும் 
வாயுவை கட்டவும் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே

பொருள்:

ஒரு தாயாகப்பட்டவள் ஓர் குழந்தையை அணைத்தால் எவ்வளவு இன்பம் ஏற்படுமோ அதுபோல் எனக்கு கை தந்து அருள் புரியவும்,தந்தை மற்றும் தாயாகவும் இருந்து என்னை காப்பாற்றி  அருள் புரியவும்,ஒரு பசுவாகப்பட்டது எப்படி கன்றை  குழந்தையாக  கொள்வதுபோல் அடியேனை  ஏற்று சீராட்டி அருள் புரியவும்,செங்கீரை பருவமான ஐந்தாவது மாதத்தில் ஒரு குழந்தை தன் தலையை இங்குமங்கும் அசைத்தாடுவது போல செல்வத்தை கேட்போருக்கு இட அருள் புரியவும்,நீர்நிலை களில் மடையை திறந்தவுடன் நீராகப்பட்டது எப்படி கரைபுரண்டு ஓடுமோ அதுபோல் அடியேனுக்கு ஞானப் பால் கொடுத்து 
அருள் புரியவும்,பக்குவத்தோடு மவுனம் என்ற தொட்டிலுக்குள் அடியேனை படுக்கவைத்து அருள் புரியவும்,வாசியை நடுநாடியில் செலுத்த அருள் புரியவும் ,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.


திங்கள், 20 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம்





குரு வணக்கம் 

குணங்குடியார் நற்குணங்குடி ஓங்கக் 
கொடு கொடு என்று அடிக்கடி குணங்குங்
குணங்குடியார் துர்க்குணங்குடி போகக்
குணமெலாம் திரண்டு அருள் பரப்பிப்
குணங்குடி ஏறிக்  குறைவற  நிறைந்து
குணக் கடலான மெய்ஞ்ஞானக்
குணங்குடி வாழும் என் அகத்தீசனாம் என்
குருபதம் சிரத்தின் மேல் கொள்வாம்

பொருள்:

என்னிடம் உள்ள நற்குணங்கள்  ஓங்கவும் ,தீயகுணங்கள் போகவும்,குணமெலாம் திரண்டு அருள் பரப்பி  குணங்குடியில் ஏறி என் குறைகள் எல்லாம் குறைவறச் செய்து குணக்கடலான என் குருநாதர் அகத்தீசர் குருபதத்தை சிரத்தின் மேல் கொள்வோம்.