புதன், 15 ஆகஸ்ட், 2018

திருமூலர் பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு

சிவலோகத்தில் உள்ள “சுத்த சதாசிவர்”என்ற மகான்,ஒருமுறை பூமியிலே இறைவனின் சிலை வடிவத்தைக் காண்பதற்காகவும்,எம்மை தரிசிப்பதற்காகவும் (யாம் அப்போது பொதிகை மலையில் இருந்தோம்),சில அரிய கருத்துக்களை தெரிந்து கொள்வதற்காகவும் பூமிக்கு வந்து,பல ஸ்தலங்களை தரிசித்து வருகையிலே,ஆடு,மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த “மூலர்” என்ற ஓர் இடையர் உயிர் இழக்க,அந்த தேகத்திற்குள் இந்த முனிவரின் ஆத்மா புகுந்து,சில லீலைகளை புரிய வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளமாக இருந்தது.கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ஆவினங்கள் மீது இரக்கம் கொண்டு,தன் தேகத்தை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு “மூலர்”உடம்பினுள் இந்த முனிவர் புகுந்து,ஆடு,மாடுகளை அந்தந்த வீடுகளில் சேர்த்துவிட்டு,மீண்டும் வந்து உடலைத் தேடியபோது,இறைவன் அசரீரி வாக்காக,”உன் உடலை யாம் மறைத்து விட்டோம்.இனி இந்த உடலிலேயே இருந்து நீ செய்ய வேண்டிய செயல்களைச் செய்” என்று கூற,பிறகு அந்த உடலிலேயே இருந்து பலருக்கு உபதேசம் செய்ததோடு, 3000 ஆண்டுகள் கடுமையான தவத்தில் இருந்தார்.
ஆண்டுக்கு ஒன்றாக பாடலைப் பாடி யோகம்,ஞானம்,மந்திரம்,தந்திரம்,வித்தை,கலை,சாஸ்திரம்,வேதம் என்று அனைத்து மூலக்கூறுகளிலும் மனிதனுக்குப் புரியும் வகையிலும்,துன்மார்க்கர்களுக்கு எட்டாத வகையிலும் நுட்பமாக மனித தேகம்,தேகம் நிலையாமை,தேகம் தோன்றுகின்ற தன்மை,ஆன்மாவின் தன்மை என்றெல்லாம் பல கூறுகளாகப் பிரித்து,அதே சமயம் மரபு,சாஸ்திரம் என்ற பெயர்களில் மனிதர்கள் புரியாமலும்,புரிந்த பிறகு சுயநலத்தாலும் செய்து வரும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி நல்லதொரு தத்துவ,ஞானப் பாடல்களையெல்லாம் இறைவன் அருளைக் கொண்டு எழுதி வைத்தார்.அப்படிப்பட்ட அற்புதமான மகான் அப்பா அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக