புதன், 15 ஆகஸ்ட், 2018

வாகனம் ஓட்டும் தொழில் செய்பவர்களுக்கு ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய அறிவுரை ஜீவ வாக்கு


“சாரதி” தொழில் என்பது,கிருஷ்ணா பரமாத்மாவின் தொழில்தானப்பா.இதில் தாழ்வு என்பது ஒருபோதும் கிடையாது.இந்தத் தொழிலின் நுணுக்கத்தை அறியாமல்,சிலர் மேம்போக்காக கற்றுக் கொள்கிறார்கள்.இதை,ஒரு மருத்துவ படிப்பு,பொறியியல் படிப்பு எப்படி சில ஆண்டுகள் சொல்லித் தரப்படுகிறதோ, அவ்வாறு,முழுமையாக மொழி அறிவு,போக்குவரத்து விதிமுறை அறிவு,வாகனத்தின் நுணுக்கத் தன்மை,இயக்கத் தன்மை என்று பிரித்து,சில ஆண்டுகள் பயிற்சி தந்தால் ஒழிய,திறம்பட செயல்பட முடியாது.அனுபவத்தால் பெறுவது என்பது வேறு.முதலில்,அறிவால் பல விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.(வாகனத்தின்)உள்ளே இருக்கும் மனிதனுக்கு,”இவன் வாகனத்தை இயக்குகிறான்,வேக நிலை மாற்றுகிறான்,வலம்,இடம் திருப்புகிறான்,வாகனத்திலே பற்று பற்றா பாகத்தை இயக்குகிறான்.வேக முடுக்கியை இயக்குகிறான்” என்பதே தெரியக் கூடாது.

அவை தெரியும் வண்ணம் எவன் ஒருவன் வாகனத்தை இயக்குகிறானோ,அவன் நல்ல சாரதி அல்ல.வாகனம் நன்றாக இருக்கும் பட்சத்தில்,இந்த கருத்து பொருந்தும்.வாகனத்தை இயக்கம் போது,இட,வலமாக அலசல் இருந்தால்,உடனடியாக,சாரதியை நீக்கிவிட வேண்டும்.”நன்றாக பயிற்சி பெறு” என்று கூற வேண்டும்.சிந்தனையை வேறு பக்கம் செலுத்தி,திடுப்பென்று வேக தடுப்பானை பயன்படுத்தினால்,அந்த சாரதி ஏற்புடையவன் அல்ல.பயணிகளை ஏற்றி வைத்துக்கொண்டு,எவன் ஒருவன் எரிபொருளை நிரப்புகிறானோ,அவன் நல்ல சாரதி அல்ல.முன்னரே,காற்று அழுத்தத்தையும்,மின் கலனின் திறனையும்,எரிபொருளையும் சோதிக்காவிட்டால்,அவன் கவனக்குறைவான சாரதி ஆகும்.நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் முன்னர்,”அ” முதல் “அஹ்” வரை சோதித்து,சிறு,சிறு,குறைகளை சரி செய்துகொள்ள வேண்டும்.என்னென்ன பாகங்கள் நடுவழியில் கை கொடுக்காமல் விலகி விடும் என்பதை முன்கூட்டியே யூகித்து,சரியான மாற்று பாகத்தை வைத்திருக்க வேண்டும்.வாகனத்தை பராமரிப்பதும் ஒரு சாரதிக்கு முக்கியம்.வாகனத்தில் ஓடுகின்ற வாயு உருளைகள் எல்லாம் ஒரு பகுதியாகவே தேய்ந்து கொண்டு வரும் என்பதால்,(சில சமயம் முறை மாற்றி ஓடுவதாக ஒரு சூழல் இருக்கும்),அப்படி செய்யவில்லை என்றால்,அந்த சாரதி,கவனக்குறைவான சாரதிதான்.எனவே,சரியான வாகனம்,சரியான சாரதி,சரியான பயணிகள் என்றால் சரியான பயணம் அப்பா.

வாகனத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல்,பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.
இப்பொழுதெல்லாம்,வெப்பம் தணிக்கும் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன.அதை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக,சாளரங்களை எல்லாம் அடைத்து வைக்கிறார்கள்.இது எதிர்பாராத விபத்தை அதிகப்படுத்தும் என்பதால்,சிறிதளவு குளிர் வெளியே சென்றாலும் பாதகமில்லை என்று வெளிக்காற்று உள்ளே வரும்படி செய்து கொள்ள வேண்டும்.அதேபோல்,வலப்புறம்,இடப்புறம் என்று எப்புறம் சென்றாலும்,அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று செல்லாமல்,நிதானமாக அதற்குரிய குறியீடுகளை அவசியம் பயன்படுத்த வேண்டும்.அது மட்டுமல்லாது,வாகனத்திலே உள்ள ஒளிரும் பொருள்கள் எல்லாம்,சரியான சாய் கோணத்திலே இருக்க வேண்டும்.ஒளிரும் பொருள்களை ஒளிர விடுவதும்,அணைப்பதுமாக திடீரென்று செய்யாமல்,முன்னரே தீர்மானித்து துவக்க வேண்டும்.உள்ளே இருக்கும் பொருள்கள் எந்த அளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்பதை அவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

வாகனத்திலே கொடுக்க வேண்டிய அழுத்தமானது எந்த அளவுக்கு,எந்த கோணத்திலே பிரயோகிக்கப் படவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மேலே உள்ள ஆழி சீசா போன்ற வண்ணங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டால்,உடனுக்குடன் எடுத்து விட வேண்டும்.இல்லையென்றால் நிறுத்துவான் என்ற பகுதிக்கு அடியிலே சென்று விட்டால்,அது இயங்காமல் போய்,விபத்தை ஏற்படுத்தும்.வேக நிலை மாற்றத்தை இயக்குவதில்,ஒரு மனிதன் கவனமாக இருக்க வேண்டும்.நிலை ஒன்று,நிலை இரண்டு,நிலை மூன்று என்று அதன் கோணத்தில் சென்று,அதனை சரி செய்வது மிகவும் சிறப்பாகும்.

வாகனத்தில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை,இந்த அண்டத்திற்கும்,உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால்,இஹ்தொப்ப தொடர்புடையவர்கள் எல்லாம்,நறுமணமிக்க புகையை (சாம்பிராணி) ஆலயங்களிலே அதிகம் இட்டு,இட்டு,இந்தக் குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.இன்னும் இப்படி,எத்தனை,எத்தனையோ யாங்கள் கூறலாம்.இவற்றை மனதில் பதிய வைத்தால் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக