புதன், 24 ஜனவரி, 2018

வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா-2018



கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் வள்ளலார். பின்னர் அவர் சென்னை, கருங்குழி, வடலூர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பாவை அருளினார்.

இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் தை மாதம் பூச நட்சத்திரத்தன்று சித்தி பெற்றார்.

இதை தொடர்ந்து மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல்பாராயணமும், 7.30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும், காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

பின்னர் 31-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

பின்னர் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக