திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 34வது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
பெயர்: மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: மேலக்கடம்பூர்
மாவட்டம்: கடலூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: அமிர்தகடேசுவரர்
தாயார்: சோதிமின்னம்மை
தல விருட்சம்: கடம்ப மரம்
தீர்த்தம்: சிவதீர்த்தம், சக்தி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
அமைப்பு தொகு
கருவறை குதிரைகள் இழுத்துச்செல்லும் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தை நினைவூட்டும் மிக நுட்பமான சிற்பங்களை இக்கோயிலில் காணலாம்.
கரக்கோயில் தொகு
தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும், இந்த ஒன்பது வகைக்குள் கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவ கோயில். மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும். வட மொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும்.
இறைவன்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அருள்மிகு சோதி மின்னம்மை
தலமரம்: கடம்ப மரம்
தல தீர்த்தம்: சிவதீர்த்தம்-கோயிலின் வட புறத்தில் சக்தி தீர்த்தம்- கோயிலுக்கு மேற்கில் சற்று தூரத்தில்
கோயில்: கரக்கோயில்
லிங்கம்: சுயம்பு
பூசை: காலை சந்தி, மாலை பூசை, இரவு பூசை
நேரம்: காலை 8-9.30 மணி, மாலை 5-8.00 மணி
நிர்வாகம்: தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை கீழ்
பாகுபாடு: பட்டியலை சாரா நிறுவனங்கள்
வழிபட்டோர் :அகத்தியர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அடியார்கள் பாடல்கள் பாடி வழிபட்ட தலம். இத்திருக்கடம்பூரின் ஞானசம்பந்தர் பதிகங்கள் 2-ம் திருமுறையிலும், நாவுக்கரசரின் பதிகங்கள் 5-ம் திருமுறையிலும் தொகுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானை கயிலை மலைக்குச் சென்று வழிபடும் தேவர்கள், எண் குலமலை தேவர்களும் அதன் தலைவன் மலையரசன், திங்கள், கதிரவன், தேவர்தலைவன், சித்தர்கள் முதலானோர் கடம்பூர் கோயிலும் கயிலை ஒத்தது என இங்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். ஒவ்வொரு யுகத்திலும் யார் யார் வந்து வழிபாடு செய்தனர் என்ற செய்திகள் அந்தந்தச் சிற்பங்களின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் நூற்றாண்டில் நாயன்மார்களால் பாடப்பெற்ற கோயில் என்பதால் ஆண்டுகட்கு மேலாக கோயில் உள்ளதாக அறியலாம். தேர்வடிவ கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி 1113-ல் அவரது 43–ம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றது. முற்கால சோழர்களின் காலத்தில் சிவாலயங்களில் சிவன் சன்னதி மட்டுமே இடம் பெற்றிருந்தன. ராஜேந்திரன் காலத்தின் பின்னரே அம்மன் சன்னதி அமைக்கும் வழக்கம் தொடங்கியது. இக்கோயிலின் ஈசானிய மூலையில் இருந்த அம்மன் சன்னதியை சுமார் வருடங்களுக்கு முன் தேவகோட்டை செட்டியார்கள் திருப்பணியின் போது கோயிலின் உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கி கட்டப்பெற்றது.
புராண வரலாறு
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமுத கலசம் பெற்றனர். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்கின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி விநாயகர் அமுதகலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில் ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது. அவரே இத்தல அமிர்தகடேசுவரர்.
பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்க லாயிற்று. தல மரமும் கடம்ப மரமாக ஆனது. இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் தினம்தோறும் வந்து வழிபட்டாள். தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்து செல்ல முற்பட்டான் தலவினாயகரின் அனுமதி பெறாமல் காரியம் செய்ய முற்பட்டதால் விநாயகர் அவன் ஆணவத்தினை அடக்க விசுவரூபம் எடுத்து அவன் தேரினை காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்தது.
பிழை உணர்ந்த இந்திரன் பாப விமோசனம் கோருகிறான். ஓர் நாழிகையில் கோடி லிங்கம் பிரதிட்டை செய்ய ஆணையிடுகிறார், செய்ய இயலாமல் போகவே ருத்திர கோடி ஜபம் செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பிழைநிவர்த்தி பெறுகிறான். ருத்ரகோடி ஜபம் செய்து பிரதிட்டை செய்த அக்கோயில் இத்தலத்தின் கிழக்கே ஒரு கி.மி. தூரத்தில் ருத்ரகோடீச்வரர் ஆலயம் என்ற பெயரில் விளங்குகிறது. அப்பர் தேவாரத்தில் “கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாய நாதனை காணலாமே” என போற்றுகிறார். நீண்ட காலமாய் சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தமிழக தொல்பொருள் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு விமான கட்டுமானம் இன்றி காட்சி தருகிறது.
கடம்ப மரம்
கடம்பூர் இக்கோயிலின் தல மரமாகும். மேலும் இம்மரத்தின் பெயராலேயே இவ்வூர் கடம்பூர் என வழங்கலாயிற்று. கடம்பமரம் இந்திய தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற மரமாகும், எனவே பரவலாக இந்தியாவெங்கும் காணப்படுகிறது, எனினும் மேற்கு கடற்கரை ஓரங்களிலும் கர்நாடகத்திலும், இமயமலை சாரலிலும் அதிகமாக காணப்படுகிறது. இது 2 மீட்டர் சுற்றளவுடன் 18 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் தாவரவியல் பெயர் அன்தொசெபால்ஸ் கடம்பா என்பதாகும். ரூபிசெயே என்ற தாவர குடும்பத்தினை சேர்ந்ததாகும். வெண்கடம்பு, மஞ்சள் கடம்பு என இரு வகைப்படும். ஆரஞ்சு வண்ணத்தில் 2 அங்குல சிறு பந்து போல மிக்க நறுமணத்துடன் மே மாதங்களில் பூக்கும். இலை கரும்பச்சையாக கையகலத்தில் இருக்கும். கடம்ப மரம் மதுரை, குளித்தலை, திருக்கடம்பூர் ஆகிய தலங்களில் தலமரமாக போற்றப்படுகிறது. வடக்கே மதுராவில் கிருஷ்ணர் கடம்ப வனத்தில் விளையாடி மகிழ்ந்ததாக ஸ்ரீமத் பகவத்திலும், சைதன்ய சரித்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. அபிராமி அந்தாதியிலும் பல இடங்களில் அன்னை கடம்ப மாலை அணிந்தவளாக போற்றப்படுகிறாள். கடம்ப பூமாலைகள் கிருட்டிணன், முருகன் இருவருக்கு மட்டுமன்றி அனைத்து தெய்வங்களும் இதனை விரும்பி ஏற்பது இப்பாடல்கள் மூலம் அறியலாம். திருமுருகாற்றுபடையில் இதனை உருள் பூ என்று நக்கீரர் எடுத்தியம்புகிறார். பனவாசியை தலை நகராக கொண்ட கடம்பர்கள் பேரரசில் வழங்கிய “முண்டா” மொழியில் ”கரம்” என்றால் கடம்பு என பொருள் எனவே கரம்+கோயில் = கரக்கோயில்,கடம்பமரத்தினை தல மரமாக கொண்ட கோயில் என கொள்ளலாம்.கடம்ப மரத்தின் இலை, பட்டை, பழம், விதை, பூ எனஅனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை.
இலைச்சாறு வாய் புண், தொண்டை அழற்சி, சர்க்கரை நோய் ஆகியவற்றினை போக்கவல்லது.
பட்டையை நீரில் இட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் தீரும்.
பழ சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் வயிற்று நோய் தீரு ரத்தத்தினை சுத்தம் செய்யும்.
விதையை அரைத்து நீரில் கரைத்து குடித்தால் கடுமையான நஞ்சு முறியும்.
பூமொட்டுக்களில் இருந்து பிழியப்படும் எண்ணை வாசனை கூந்தல் தைலமாக பயன்படுகிறது.
பிற சிறப்புகள்
அட்டமி திதி இரவில் வணங்கவேண்டிய கால வைரவர்.
கழுகு வாகனத்தில் காட்சி தரும் சனி பகவான்.
கற்சிலையாக காட்சி தரும் நடராஜர் –சிவகாமி
அறிவாற்றல் என்னும் சோதி வடிவினலாய் விளங்கும் சோதிமின்னம்மை
கடம்பவன தலமாதலால் சதய நட்சத்திர அன்பர்கள் வழிபட வேண்டிய தலம்.
3,4,5 பங்குனி தேதிகளில் காலை 6.15 க்கு சூரியக்கதிர்கள் அமிர்தகடேசுவரர் மீது விழும் அற்புதம்.
சங்கு சக்கரத்துடன் சிம்ம வாகினியாகவும் மகிஷாசுரமர்த்தினியாகவும் காட்சி தரும் துர்க்கை.
“மிர்தம்” என்றால் மரணம் “அமிர்தம்” என்றால் மரணமற்ற நிலை. அதனால் அமிர்தத்தால் உருவான அமிர்தகடேசுவரர் ஆயுள் பலம் தருவார் என்பதால், சதாபிஷேகம் ,சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் நடத்த ஏற்ற தலம.
இந்திரன் வழிபட்டு பாப விமோசனம் பெற்ற பாபஹரேசுவர லிங்கம். *அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்.
சூரனை அழிக்க வில் பெற்ற தலம்
எமன், சித்திரகுப்தனுடன் சிவலிங்க வழிபாடு செய்யும் பிரம்மன்.
அனுமன், கருடனுடன் சிவலிங்க வழிபாடு செய்யும் மகாவிஷ்ணு..
பிறவிக்கடன் தீர்க்கும் கடம்பநாதர்.
கங்கை படையெடுப்பின் போது கொண்டு வரப்பட்ட வலம்புரி ஆரவார விநாயகர்.
அர்த்தநாரியின் கீழ் பாம்பணையில் பள்ளி கொண்டுள்ள மகாவிஷ்ணு.
கங்கைக்கு சமமான புண்ணிய தீர்த்தம் சக்திதீர்த்தம், இங்கு அஸ்தியினை கரைத்து புண்ணியம் பெறலாம்.
மிகவும் சிறப்பான இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது
கோயில்:04144 262646
குருக்கள்:09345656982
-நன்றி
சுவாமிநாதன் கோபாலன்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக