செவ்வாய், 3 அக்டோபர், 2017

அகத்தியர் ஸ்தாபித்த நூற்றெட்டீஸ்வரர்



அகத்திய மாமுனிவர் காசிக்குச் செல்லும்போது சதுர்வேதிபுரம் (தற்போது சின்னகாவணம்) என்னும் தலத்தில் தங்கி இருந்தார். அச்சமயம் அகத்தியரின் கனவில் தோன்றிய சிவபெருமான் இத் தலத்தில் உள்ள ஏர் அழிஞ்சல் (அங்கோளம்) மரத்தடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தால், காசிக்குச் சென்றால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் இங்கே கிடைக்கும் என்று கூறினார்.

அகத்தியர், இறைவன் அருளியபடி அருகிலேயே ஓடிக்கொண்டிருக்கும் ஆரண்ய நதிக்கரையிலிருந்து மணல் கொண்டுவந்து லிங்கம் செய்து பூஜை செய்தார். இப்படியாக, 108 நாள்களுக்கு 108 மணல் லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வணங்கினார். ஆனால் வேதங்களுக்கு அதிபதியாகிய விநாயகப் பெருமானை வணங்க மறந்ததின் விளைவாக, 108 ஆவது நாளில் 108 லிங்கங்களும் ஒன்றாக இணைந்து விநாயகப் பெருமானாக காட்சியளித்தார். இவர் அங்கோள மரத்தடியில் சிறிய தும்பிக்கையுடன் "அங்கோள கணபதி'யாக இன்றும் காட்சியளிக்கிறார்.

நினைத்த காரியம் நடைபெற அங்கோள கணபதிக்கு வடைமாலை சாற்றுவதாக வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும். தை மாதத்தில் காணும் பொங்கல் தினத்தன்று இவ்விநாயகருக்கு அபிஷேகமும் ஏர்அழிஞ்சல் மரத்திற்கு புத்தாடைகளும் அணிவித்து அர்ச்சனை செய்தால் எல்லா சுப காரியங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

 ஏர்அழிஞ்சல் மரத்தின் வயது சுமார் 2,900 ஆண்டுகளாகும். இம்மரத்தின் சிறப்பு என்னவென்றால் பங்குனி மாதத்தில் பூ பூத்து சித்திரை, வைகாசியில் பழம் பழுத்து கீழே விழும். கனிகள் கீழே விழுந்தபின்னர், விதைகள் தாமாக ஊர்ந்து சென்று மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு மரத்தில் ஒட்டிய விதைகளைப் பிரிக்க முடியாது. அதனால் இதனை வேதவித்து என்றும் பிறக்கும் உயிர்கள் மீண்டும்

இறைவனிடமே சென்றடையும் தத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் இறையம்சம் நிறைந்த விருட்சமாக போற்றுகின்றனர். ஆதிசங்கரரும் தமது சிவானந்தலகரியில் பக்திக்கு எடுத்துக்காட்டாக ஏர்அழிஞ்சல் மரத்தை கூறியுள்ளார். இதன் விதைகள் ஊர்ந்து செல்வதை இதுவரை எவரும் கண்டதில்லை என்றும் இவ்வாலய குருக்கள் தெரிவிக்கிறார்.

அகத்தியர் இத்தலத்திற்கு வருவதற்கு முன்பாகவே, இத்தலம், சதுர்வேதபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, இத்தல இறைவன் சதுர்வேதபுரீஸ்வரர் என்றும் அம்பிகை சிவகாமி என்றும் வழங்கப்பெற்றனர். தற்போது இம்மூர்த்தங்களும் தனித்தனி சந்நிதியில் அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

பின்னாளில் இத்தலத்தின் சிறப்பைக் கேள்விப்பட்ட மன்னன் நந்திவர்மன், புதிதாக சிவலிங்கம் மற்றும் அம்பிகையை பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ அஷ்டோத்தீஸ்வரர் (நூற்றெட்டீஸ்வரர்), அஷ்டோத்திரவல்லி (நூற்றெட்டீஸ்வரி) என்ற திருநாமங்கள் சூட்டி, வணங்கி வந்ததாக தெரிகிறது. இன்றளவும் ஆலயத்தின் பிரதான மூர்த்தியான நூற்றெட்டீஸ்வரர் லிங்கரூபமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இறைவி நூற்றெட்டீஸ்வரி அங்கோள கணபதிக்கு நேர்எதிரில் தெற்கு நோக்கி தனிச் சந்நிதி கொண்டு அமைந்துள்ளார். இந்த அம்பிகை இரு திருக்கரங்களிலும் தாமரை மலரை ஏந்தி மகாலட்சுமியின் அம்சத்துடன் விளங்குகிறார். திருமணத் தடையுள்ளவர்கள் மூன்று பௌர்ணமிகளில் இவ்வம்மனுக்கு ரோஜா மாலை அணிவித்து வணங்கி வந்தால் திருமணத்தடை நீங்கி நல்ல படியாக திருமணம் கைகூடும். ஆலயத்தின் வெளிச்சுற்றில் தனிச்சந்நிதியில் எழுந்தருளியுள்ள பைரவர், உயர்ந்த திருமேனியுடன் விளங்குகிறார்.

 மாதா மாதம் சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி, பிரதோஷ விழாக்களுடன் மகாசிவராத்திரி தினத்தில் 108 சங்கு அபிஷேகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, நவராத்திரி உற்சவம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி ஆருத்ரா போன்றவையும் சிறப்பாக நடைபெறுகின்றன.

சின்னக்காவணம், வள்ளலார் சுவாமிகளின் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊராகும். இங்கு அவர் பிறந்த இல்லத்தில் மணிமண்டபம் அமைந்துள்ளது.

ஆலயம் செல்லும் வழி: சென்னையிலிருந்து ரெட்ஹில்ஸ் - பொன்னேரி வழியாக சுமார் 40 கி.மீ. தொலைவில் பழவேற்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது சின்னக்காவணம். ரயில் மார்க்கத்தில் பொன்னேரி ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் கோயிலை சென்றடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக