வியாழன், 5 பிப்ரவரி, 2026

ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிச் செய்த கன்ம காண்டம் -கண் நோய் வரலாறு

கண் நோய் வரலாறு 

கருதியதோர் கண்ணில் வந்த வியாதி கேளு
காரணந்தான் சொல்லுகிறேன் கட்டாய் கேளு
வெருதியென்ற மாதர்களையுற்றுப் பார்த்து
வுடனேங்கி மோகமுற்று வுடற்பா வந்தான்
சதிருடனே கருக்கண்டு வழித்த தாலுஞ்   
சக்தித்தோ டத்தாலுந் தெய்வத்தாலும்
விருதுடனே பலவுயிரைக் கண்டு
விலக்காதே பார்த்திருந்த வீரினாலே

வீறான பலபாவஞ் செய்கை யாலு
மெய்யதனைப் பொய்யென்ற வம்பினாலும்
வேறாக பிறக்கிடுகண் செய்த தாலும்
மிக்க சிவாலயங்கள் விருமபாததாலும்           
கூரான தெய்வத்தை யிகழ்ந்த தாலுங்
கூர்விழியில் நேர்விளங்குஞ் சலந்தானப்பா
வாறாக தொண்ணுற்றாறு வியாதி வரலாறு
மதிகமாங் கன்மமென வரிந்து சொல்லே 


கன்ம நிவர்த்தி

சொல்வதென்ன கன்மம்வந்து தொடர்ந்து தானாற்
சூத்திரமாந் தான தர்மஞ் செய்ய வேணுஞ்
சொல்வதென்ன கோவில்குளந் தீர்த்த வாசஞ்
சிவனோடு பஞ்சகர்த்தாள் தெரிசனமாம் பூசை
வெல்வதென்ன கோயில்குளங் கட்டவேணும்
வேதியர்க்குத் தான தர்ம மிகவுஞ் செய்தல்
கொல்வதொன்றுஞ் செய்யாதே யிரப்போர்க் கீதல்
குருபாதந் தனைப்பணிதல் கொள்கை யாமே

ஆமிந்த வுலகத்தில் லிருக்கும் போதி
லளவற்ற கன்மமடா ஆர்தான் வெல்வார்
தாமிந்த கன்மமொன்று மணுகா தப்பா
சார்வான சிவயோகி தவத்தி னாலே
வாமிந்த தேவிசிவ பூசையாலே
மகத்தான தருமமென்ற குளிகையாலே
யோமிந்தப் பெரியோர்க ளானவாறு
முலகத்துள் ளோர்க்குற்ற தர்மந் தானே

தர்மமது செய்வதற்கு கசந்தா யானால்
சண்டாள பாவம்வந்து சபிக்கும் பாரு
வர்மமென்ற காசமது கண்ணில் வந்து
மருளாக விறுவிழியை மறைத்துக் கொள்ளுங்
கன்மமென்ற காசமது கண்ணில் வந்து
மருளாக விறுவிழியை மறைத்துக் கொள்ளுங்
கன்மமென்ற காசநீர் முதலா யுள்ள
கண்மாந்தர நோய்கவிழ்தங்  கருதிக் கேளு
நிர்மலமா மிரும்பீயங் காந்த மீய
மிரண்டுடனே கெந்தியரி தாரம் வீசுமே    

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -4

வெள்ளி, 3 ஜூலை, 2020

தொற்று நோயிலிருந்து விடுபட குருமார்களை பணிந்து போற்றுவோம்




புண்ணிய பூமியான இந்த பாரத தேசமும்,ஆன்மீக பூமியான இந்த தமிழகமும் தொற்று நோயின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றது.எந்த மருத்துவமும் கை கொடுக்கவில்லை மற்றும் மக்களும் கலியின் பிடிக்கு ஆட்பட்டு இறை நினைப்பை விடுத்து உலகமே துன்பத்தில் ஆழ்ந்து அடைபட்டு கிடக்கிறது.

பல சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் தோன்றிய இந்த புண்ணிய பூமிக்கு ஏன் இந்த இழிநிலை?.

அவர்களை நாம் மறந்ததுதான்.

கருவூரார் சித்தர் தன் வாதகாவியம் பாடல் 147ல் சொல்கிறார்...

கலியன் வந்தானென்று ககன ரிஷிகளும்
கலியனைக் கண்ணிலும் காணாதிருக்க
கலியனை விட்டு கயிலைக்கு சென்றே
கலியுக மட்டுங் கடுந்தூக்கங்கொண்டார்

என சொல்கிறார்..அதாவது இப்போது இருக்கும் கலியுகத்தை கன்ணிலும் பார்க்க கூடாது என்றும் வாழப்பிடிக்காமலும் கயிலை மலையில் யோக நிஷ்டைக்கு சென்று விட்டார்களாம்..அவ்வளவு அராஜகங்களும் கொடூரங்களும் தர்மத்துக்கு இடையூறுகளும் நடக்குமாம் இந்த கலியுகத்தில்.கலியுகத்தில்உண்மையானசித்தர்களும்,முனிவர்களும்,
சாமியார்களும் காண முடியது என்றும் அப்போதே சொல்லி இருக்கிறார்.        

ஆனால் உண்மையாக தன் குருமார்களிடம் பக்தி கொண்டோர் வேண்டினால் அவர்கள் தங்களின் தூக்கத்தை கலைத்து தம் சேய்களான நம்மை காப்பாற்ற மாட்டார்களா?

இந்த குரு பூர்ணிமா நிகழும் நன்னாளான 

04-07-2020  மதியம் 12:02ல் இருந்து நாளை காலை  05-07-2020 10:58 க்குள் 

அவர்களை வேண்டி துதிப்போமா?

நம்மை படைத்த தெய்வம் நம்மை காக்காதா?.ஏன் குருமார்களை வேண்ட வேண்டும் என்று கேட்கலாம்.

நீங்கள் குருவிடத்து வேண்டும் போது,உங்களின் வேண்டுதல் அவரின் பரம குருவிடம் செல்லும்.பின் பரமகுருவின் வேண்டுதல் பராபர குருவின் குருவிற்க்கு செல்லும்.பராபர குருவின் வேண்டுதல் பராபரத்திடம்  செல்லும்.

நம்முடைய வேண்டுதலால் மட்டும் இந்த தொற்று நோயை ஒழிக்க இயலாது.நம்முடைய குருமார்களும்,அவர்தம் குருமார்களும் துணை நின்றால் மட்டுமே சாத்தியம்.

வேண்டுதல்.

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!      
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக !

அப்பனே!எங்கள் குருமார்களே,முனிவர் பெருமக்களே,ரிஷிமார்களே,முனிபுங்கவர்களே,சித்த புருஷர்களே மற்றும் ஆச்சாரிய பெருமக்களே இது காலும் தங்களை மறந்து நாங்கள் இறை நினைப்பு சற்றும் இன்றி கலியின் ஆட்டத்திற்கு உட்பட்டு கிடக்கின்றோம்.இறையும் குருவும் ஒன்றென உணர்ந்தோம்.ஆகையால் எங்களை எல்லோரும்  உங்கள் சேய்களாக ஏற்று

மானிட ரூபமுள்ள ருத்ர பசுபதியும்

சிவ தத்துவம்,ஆத்ம தத்துவம்,வித்யா தத்துவம் மற்றும் சர்வ தத்துவங்களுக்கு மத்தியில் பிந்துவில் மும் மூர்த்திக்களையும்,பஞ்ச பூதங்களை ஆசனமாக கொண்ட அன்னை லலிதாம்பிகையும்              
 
 
இந்த தொற்று நோயின் பிடியில் இருந்து அனைத்து உலக மக்களையும்  காப்பாற்றி உய்வித்து அருள தங்களின் பொற்கமல பாதார விந்தங்களை பணிகின்றோம்.

ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
 திருவடிகள் போற்றி ! போற்றி !      

ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
 திருவடிகள் போற்றி ! போற்றி !
         
ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
 திருவடிகள் போற்றி ! போற்றி !            

திங்கள், 27 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -3



தாயாயுமென்றந்தை  தானாயுநின்று நீ
தானாகவருள்  புரியவும்
தாபந்தமெல்லா மறிந்த நிஷ்டைச்
சகாவென்றவருள்  புரியவும்
நாயடியனுய்பும்  பொருட்டாகரட்சித்து
நாடோறுமருள்  புரியவும்
நச்சுநச்சென்றனைய ரற்றுறெ என்றனை   
நகைத்திடாதருள்  புரியவும்
தூயனேமாயனே  நேயனே தாயனே 
தொழும்புகொண்டருள் புரியவுந்
தோலாவழக்கனிவ னென்றுசொல்லாமெலென்
றுரையேயுனருள்  புரியவும்
வாய்மொழிமறக்கும்முன் றவராஜசிங்கமே     
வரவேண்டுமென்றனருகே
மாகுணங்குடிவாழு  மென்னகத்தீசனே

பொருள்:

எனக்கு தாயாகவும் ,தந்தையாகவும் நின்று தானாக அருள்  புரியவும்,புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தாங்கள் அறிந்த தியானத்தில் சங்கடம் இல்லாமல் வாசியே எனக்கு நண்பனாக  அருள்  புரியவும்,நாய்  போன்ற அடியேனையும் ஒரு  பொருட்டாக ஏற்று ரட்சித்து நாள்தோறும் அருள்  புரியவும்,நச்சு,நச்சு என்று புலம்புகின்ற என்னை பார்த்து சிரிக்காமல் அருள்  புரியவும் ,தூய்மை ஆனவரே,மாய தோற்றம் கொண்டவரே  ,அன்புள்ளம் கொண்டவரே ,தாய் போன்றவரே,உன் அடியார் கூட்டத்தில் என்னை ஆட்கொண்டு சேர்த்து அருள் புரியவும்,தீராத வழக்கு கொண்டவன் சொல்லி என்னை ஒதுக்காமல் என் துரையே அருள் புரியவும்,உண்மையான மொழியால் அடியேன் பாடியவை யாவும் மறக்கும் முன் தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -2



என் தலையிட்ட விதி என்னமோ என்னநான்
இடையாமல் அருள் புரியவும்
என் செய்தேன் என்றடிமை எண்ணாத எண்ணங்கள்
எண்ணாமல் அருள் புரியவும்
பந்தமதில் இட்ட மெழுகு என்னை நெஞ்சுருகிப்
பதைத்திடாது அருள் புரியவும்
பாவி ஆகாது என கருணை நயனம் கொண்டு
பார்த்து நல் அருள் புரியவும்
மந்திரம் கொண்டு மாங்காய் விழாது ஆதலான்
மனம் உவந்து அருள் புரியவும்
மாரியினும்  நின் கருணை மாறி அணுமாறாது
வருஷிக்க  அருள் புரியவும்
வந்து பணிவார்க்கு உதவு மெய் தவராஜ சிங்கமே
வரவேண்டும் எந்தன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மௌன தேசிக நாதனே

பொருள்

என் தலையில்  எழுதப் பட்ட  விதி என்னவாக இருந்தாலும் அடியேனுக்கு அருள் புரியவும், அடியேன்  என்ன செய்தேன் என்று எண்ணங்களால் எண்ணிப் பார்க்காது அருள் புரியவும், மெழுகு போன்ற பந்தத்தில் இடப் பட்ட என்னை மெழுகாகப்பட்டது நெருப்பால் உருகிப் போவது போல் பதைத்திடாது அருள் புரியவும்,என்னை பஞ்சமாபாதகம் செய்த பாவி என்று ஆகாது என ஒதுக்காமல் நின் கருணை பார்வை கொண்டு பார்த்து நல் அருள் புரியவும்,வெறும் மந்திரம் சொன்னால் மாங்காய் பால் என்ற அமிர்தம் சகஸ்ரஹாரத்தில் இருந்து சுரக்காது மற்றும் நின் கருணையால் அது கூடும் என்று சித்தாதி சித்தர்கள்,தேவர்கள்,ரிஷிகள் நினைப் பணிந்தனர், ஆதலால் மனம் உவந்து அருள் புரியவும்,மேகத்திலிருந்து பொழியும் நீரின் தன்மை அணு அளவு கூட எப்படி மாறதோ அது போல் அடியேனும் கருணை மழை  பொழிந்து  அருள் புரியவும் ,உன்னை வந்து பணிபவர்களுக்கு எல்லாம்  உதவுகின்ற சத்தியமாகிய,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

 


செவ்வாய், 21 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை


குருவருள் நிலை

தாய் அனைய இன்பம்தனைந் தந்து தந்துகை
தழுவி நின்று அருள் புரியவும்
தந்தை தாயும் தானே ஆகவும் இருந்து எனைத்
தற்காத்து உன் அருள் புரியவும்
சேய் என்று இரங்கி அனைகாலியின் கன்றுஎனச்
சீராட அருள் புரியவும்
செங்கீரை ஆடு சிறுமதலை போல் கொஞ்சிநான்
செல்வம் இட அருள் புரியவும்
பாயும் மடை கால் கண்டு கரைபுரள வரும் மதிப்
பால் கொடுத்து அருள் புரியவும்
பக்குவத்தோடு மவுனத் தொட்டிலுக்குள்
படுக்க வைத்து அருள் புரியவும் 
வாயுவை கட்டவும் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே

பொருள்:

ஒரு தாயாகப்பட்டவள் ஓர் குழந்தையை அணைத்தால் எவ்வளவு இன்பம் ஏற்படுமோ அதுபோல் எனக்கு கை தந்து அருள் புரியவும்,தந்தை மற்றும் தாயாகவும் இருந்து என்னை காப்பாற்றி  அருள் புரியவும்,ஒரு பசுவாகப்பட்டது எப்படி கன்றை  குழந்தையாக  கொள்வதுபோல் அடியேனை  ஏற்று சீராட்டி அருள் புரியவும்,செங்கீரை பருவமான ஐந்தாவது மாதத்தில் ஒரு குழந்தை தன் தலையை இங்குமங்கும் அசைத்தாடுவது போல செல்வத்தை கேட்போருக்கு இட அருள் புரியவும்,நீர்நிலை களில் மடையை திறந்தவுடன் நீராகப்பட்டது எப்படி கரைபுரண்டு ஓடுமோ அதுபோல் அடியேனுக்கு ஞானப் பால் கொடுத்து 
அருள் புரியவும்,பக்குவத்தோடு மவுனம் என்ற தொட்டிலுக்குள் அடியேனை படுக்கவைத்து அருள் புரியவும்,வாசியை நடுநாடியில் செலுத்த அருள் புரியவும் ,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.


திங்கள், 20 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம்





குரு வணக்கம் 

குணங்குடியார் நற்குணங்குடி ஓங்கக் 
கொடு கொடு என்று அடிக்கடி குணங்குங்
குணங்குடியார் துர்க்குணங்குடி போகக்
குணமெலாம் திரண்டு அருள் பரப்பிப்
குணங்குடி ஏறிக்  குறைவற  நிறைந்து
குணக் கடலான மெய்ஞ்ஞானக்
குணங்குடி வாழும் என் அகத்தீசனாம் என்
குருபதம் சிரத்தின் மேல் கொள்வாம்

பொருள்:

என்னிடம் உள்ள நற்குணங்கள்  ஓங்கவும் ,தீயகுணங்கள் போகவும்,குணமெலாம் திரண்டு அருள் பரப்பி  குணங்குடியில் ஏறி என் குறைகள் எல்லாம் குறைவறச் செய்து குணக்கடலான என் குருநாதர் அகத்தீசர் குருபதத்தை சிரத்தின் மேல் கொள்வோம்.