இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப இத்தருணம் முடவன் வாரம் தன்னிலே இவ்விடத்திலே சேர்ந்து வந்து இஃதொப்ப கலந்தாய்விலே கலந்து கொண்டு இஃதொப்ப மனம் உவந்து இவையெல்லாம் செய்யலாம் என்று எண்ணம் கொண்ட, செயலும் கொண்ட இஃதொப்ப அனைவருக்கும் எம் பரிபூரண நல்லாசிகள். இயம்புங்கால் இஃதொப்ப பல்வேறுவிதமான வாக்குகளை பல்வேறு தருணங்களில் எமை நாடும் மாந்தர்களுக்கு யாம் பலமுறை கூறியிருந்தாலும்கூட பலமுறை கூறவேண்டிய தருணம் யாதென்றால் கூறுகின்ற வாக்கின் தன்மையை கேட்கின்ற மனோபாவத்தை பொருத்து ஒவ்வொரு மனிதனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இஃதொப்ப மனம் மகிழ்வாக, அதாவது மகிழ்வு என்ற சொல்லாடல் அந்தந்த மனிதனின் மனநிலையைப் பொறுத்து இங்கே நாங்கள் கையாளுகிறோம். அப்படியொரு மகிழ்வில் வந்து அமரும்போது நாங்கள் கூறுகின்ற தத்துவார்த்த விளக்கங்கள் எல்லாம் திருப்தியாக, ஏற்புடையதாக இருக்கிறது. இறையை நம்புகிறான், எம்மை நம்புகிறான். ஆனால் அவன் எண்ணுகின்ற நிலையில் வாழ்வு நிலை இல்லை என்ற ஏக்கத்தோடு, விரக்தியோடு அதிருப்தியாக எம்முன்னே அமரும்பொழுது நாங்கள் எதைக் கூறினாலும் அதனை அவனால் திருப்தியாக ஏற்க இயலாது. இஃதொப்ப நிலையிலே யாம் பல்வேறு தருணங்களில் முன்னுரை என்ற ரீதியிலே கூறும்பொழுதே வருகின்றவனுக்கு அத்தனையையும் வெட்டவெளிச்சமாக கூறாவிட்டாலும் இலைமறை காயாக கூறுகிறோம். ஆனால் அதை அவன் புரிந்து கொள்வதில்லை.
இறைவனின் கருணையைக்கொண்டு யாம் இத்தருணம் கூறுவது யாதெனில் வருகின்ற மனிதன் புரிந்துகொள்ளும்படியாக கூறினால் என்ன ? என்றால். அப்படிக் கூறினாலும்கூட, புரிந்துகொள்ள மறுப்பதும் அல்லது அந்த நிலை வாக்கை நாங்கள் ஏற்கவில்லை என்ற ரீதியில் விவாதம் செய்வதும் அல்லது அனைத்தையும் தாண்டி இவைகளை பொய் என்று கூறுவதும் மனிதனின் இயல்பு. இந்த இயல்பை அறிந்தேதான் யாம் காலகாலம் இஃதொப்ப அருள்வாக்கினை கூறிவருகிறோம். இயம்புங்கால் மேலும் இஃதொப்ப நிலையிலே தெள்ளத் தெளிவாக, வெட்டவெளிச்சமாக எதைக் கூறவேண்டும் ? எதைக் கூறக்கூடாது ? என்ற இறைக் கட்டளைக்கேற்பவே கூறவேண்டியிருக்கிறது.
உதாரணமாக அப்படிக் கூறுவதாக வைத்துக்கொண்டால் அதனை ஏற்று அமைதி அடையக்கூடிய பக்குவம் எத்தனை மனிதர்களுக்கு இருக்கும் ? என்று பார்த்தால் அது மிகவும் குறைவு. இப்படியிருக்கும் பட்சத்திலே முன்னரே பக்குவமின்மையோ, விதியோ அல்லது அறியாமையோ, துன்பத்தில் வந்து எம்முன்னே வந்து அமருகின்ற மனிதனுக்கு யாமும் ஒருவிதமான வாக்கைக் கூறி அவனை சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஒன்று, மௌனமாகி விடுகிறோம். இல்லையென்றால் அவன் திருப்தியடையும் வண்ணம் கூறிவிடுகிறோம். இப்படிக் கூறுவதால் அடுத்த வினா வரும், சித்தர்கள் பொய் உரைக்கலாமா ? என்று. ஏற்கனவே நாங்கள் பொய்தான் உரைத்துக் கொண்டிருக்கிறோம் என்று பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அஃதொப்ப நிலையிலே ‘ பொய்மையும் வாய்மையிடத்து ‘ என்ற கருத்தை இங்கே பொருத்திப் பார்க்கவேண்டும்.
இஃதொப்ப மெய்யிலும் மெய்யை நாங்கள் கூறவேண்டுமென்றால் இங்கு வருபவன் மெய்யாக இருக்கவேண்டும். இங்கு வருபவன் யாரும் மெய்யாக இல்லை என்பதே மெய்யிலும் மெய்யான உண்மையாகும். அதாவது, எம்மை நாடுவதும், எம் மீது பற்று வைப்பதும், பக்தி வைப்பதும் என்பது வேறு. ஆனால் நாங்கள் வந்து வாக்கைக் கூறுகிறோம் என்பதற்காக எல்லாவகை உரிமைகளையும் எடுத்துக்கொண்டு, “ நான் எதிர்பார்க்கின்ற சூழலை அமைத்துத் தந்தால்தான் நம்புவேன் “ என்ற ரீதியில் ( இங்கு ) வந்தால் இன்றல்ல, நாளையல்ல, கல்ப கோடி காலம் ஆனாலும் சித்தர்களுக்கும், மனிதர்களுக்கும் சரிவிகித சமரச உடன்பாடு என்றுமே வராது. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இப்பொழுது மேலும் இதுபோன்ற சிக்கலான தத்துவார்த்த கருத்துக்களைக் கூறினால் மீண்டும், மீண்டும் குழப்பமான பொருளைதான் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நிலை உருவாகும்.
அடுத்ததாக இஃதொப்ப நிலையிலே பல்வேறுவிதமான சிந்தனைகள் கொண்டவர்கள் இங்கு வருவதும், போவதும் பின்னர் தூற்றுவதும் என்பது இயல்பு. இது காலகாலம் நடக்கக்கூடிய நிகழ்வு. இதற்காக இதழ் ஓதுபவனோ, மற்றவர்களோ விசனம் கொள்வதும், வேதனை கொள்வதும் அறிவுடைமை ஆகாது. ஒருவன் முதலில் இங்கு வருவான். இதை நம்புவான். எம்மை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவான். அடுத்த சில மாதங்களில் கீழே போட்டு மிதிப்பான். இவையும் நடந்து கொண்டுதான் இருக்கும். இதுபோன்ற மனிதர்களை மனதிலே வைத்து எந்தவொரு காரியத்தையும் செய்தல் கூடாது. எனவே வருபவர் வரட்டும். செல்பவர் செல்லட்டும். ஒத்துக் கொள்ளக்கூடிய மனிதன் ஒத்துக் கொள்ளட்டும். மறுக்கக்கூடிய மனிதன் மறுக்கட்டும். ஆனாலும்கூட இஃதொப்ப நிலையிலே இன்னும் எத்தனை கடினங்கள், எத்தனை வேதனைகள் அனுபவித்தாலும் இஃதொப்ப நிலையில் தர்மம், சத்தியம், பக்தி – இந்த மூன்றையும் தவறாமல் கடைபிடிப்பேன் என்ற ஒரு வைராக்கியம் இருப்பவனுக்குதான் தொடர்ந்து எமது வழிகாட்டுதல் என்பதும் இருக்கும். தொடரும். இன்னொன்று, இஃதொப்ப விபத்தை முன்கூட்டியே உணர்ந்து சிலரை காப்பாற்றுவதுபோல பலரை ஏன் காப்பாற்றவில்லை ? என்ற ஒரு வினா வரும். அடுத்ததாக, அப்படியானால் அகஸ்தியரை வணங்கினால் அல்லது மற்ற சித்தர்களை நம்பினால்தான் காப்பாற்றுவார்களா ? நம்பாதவர்களையெல்லாம் கைவிட்டுவிடுவார்களா ? என்ற ஒரு சிந்தனை, வினா வரும்.
அப்படியல்ல. யார், யாருக்கு விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் கடுமையான விதியிலிருந்து ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு சரியான காரணத்தை இறையிடம் நாங்கள் காட்ட வேண்டும். அப்படி சரியான காரணம் எம்மைப் பொருத்தவரை தர்மம், தர்மம், தர்மம், தர்மம், தர்மம், தர்மம். இது ஒன்றுதான். அதனையும் தாண்டி மனதிலே அப்பழுக்கில்லாமல், எந்த சூது, வாது இல்லாமல் சிறு குழந்தைபோல் மனதை வைத்திருந்தால் அதையும் ஒரு சரியான காரணமாகக் காட்டுவோம். ஆனால் இங்கு வருகின்ற பலருக்கும் வெறும் லோகாய விஷயங்களைக் கேட்பதற்காக நாங்கள் வருத்தப்படவோ, சினப்படவோ இல்லை. அது மனிதனின் தேவை, நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எம்மிடம் வந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குற்றம் எங்கே ? என்று யாரும் சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை.
எனவே இன்று இங்கு எம்முன்னே அமர்ந்து வாக்கைக் கேட்கின்ற அனைவருக்கும் கூறுகிறோம். எமது வாக்கை நூற்றுக்கு நூறு சரியாகப் புரிந்து கொண்டு, சரியான தர்ம வழியில் எவனொருவன் நடக்கிறானோ, கட்டாயம் அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எதைக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் அவனுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை நாங்கள் இறையருளால் செய்திருக்கிறோம், செய்து கொண்டிருக்கிறோம், இனியும் செய்வோம். “ அப்படியெல்லாம் ஏதுமில்லை. பல ஆண்டுகளாக சித்தர்கள் வழியில் நான் வருகிறேன். என் கஷ்டங்கள் எதுவும் தீரவில்லை. மாறாக கஷ்டங்கள் அதிகமாகி இருக்கிறது “ என்று யாராவது எண்ணினால் இரண்டு நிலைகளை அங்கே பார்க்க வேண்டும்.
ஒன்று, பரிபூரணமாக முன் ஜென்ம பாவங்கள் அங்கே குறையவில்லை. முன் ஜென்ம பாவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் இந்த ஜென்மத்தில் இளமை காலத்திலிருந்து அவன் நடந்துகொண்ட விதத்தை சிந்தித்து பார்த்தால் எங்கே குற்றம் ? எங்கே குறைகள் ? என்பது அவனவன் மனதிற்கு கட்டாயம் புரியும்.
எனவே இறைவன் அருளைக்கொண்டு கூறுவது என்னவென்றால் நூற்றுக்கு நூறு எம்மை நம்பி எம் வழியில் வருகின்ற அனைவருக்கும் நாங்கள் இறைவனருளால் நல்ல வழி காட்டுவோம். உலகியல் ரீதியாக முன்னேற்றம் காட்டினால்தான் ஒருவனுக்கு நாங்கள் அனுக்ரஹம் செய்கிறோம் என்பது மிகவும் குழந்தைத்தனமான எண்ணம். நன்றாக எமது வார்த்தையை கவனித்து பொருள் கொள்ளவேண்டும். எதற்காக இந்த ஜீவ அருள் ஓலைக்கு இங்கு வருகின்ற அனைவரையும் இழுத்து வந்து விதவிதமான வாக்குகளைக் கூறி, விதவிதமான தேர்வுகளை வைக்கிறோம் என்றால் இங்கு மனித நிலையிலே வெறும் தோற்றத்தில் மனிதனாக குணத்தில் மிருகமாக இருக்கலாம். பிறகு தோற்றத்திலும், குணத்திலும் மனிதனாக இருக்கலாம். தோற்றத்திலும், குணத்திலும் மனிதனைவிட மேம்பட்ட மாமனிதனாக இருக்கலாம், புனிதனாக இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு மனித ஆத்மாவையும் சித்த ஆத்மாவாக மாற்றவேண்டும். இதுதான் இறைவன் எங்களுக்கிட்ட கட்டளை.
ஒவ்வொரு மனிதனையும் சித்தர்களாக மாற்றவேண்டும் என்றால் அது எத்தனை பெரிய இரசவாதம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அது எளிமையான காரியம் அல்ல. செம்பை தங்கமாக்குவதோ அல்லது இரும்பை பொன்னாக்குவதோ அல்ல. அது மிக, மிக எளிது. ஆனால் மனிதனை குறைந்தபட்சம் மனிதனாக்கி, அவனை மாமனிதனாக்கி, அந்த மாமனித நிலையிலிருந்து மேலும் புனிதனாக்கி அவனை நல்ல நிலையிலே சித்தனாக்க வேண்டும். அப்படி சித்த நிலையை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாங்கள் கற்பிக்கும் பாடங்கள் கடினமாகத்தான் இருக்கும். அந்த பாடங்களை சரியாக உள்வாங்கி எவன் புரிந்து கொள்கிறானோ, லோகாய கஷ்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து எம் பின்னால் வருகிறானோ அவனை நாங்கள் ஒரு சித்தனாக்கி விடுவோம். சித்தனாக்கி விட்டால் பிறகு அவன் எதற்கு இன்னொரு சித்தனை நாட வேண்டும் ? அவன் இறையைகூட நாடத் தேவையில்லை. ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் அந்த நிலைக்கு அழைத்துப் போகவேண்டும் என்றுதான் நாங்கள் இந்த ஜீவ அருள் நாடி என்று நாமமிட்டு மூன்று முனிவர்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
பலர் எண்ணலாம். உலகியல் ரீதியான எல்லா பிரச்சினைகளும் தீர்ந்த நிலையில் நிம்மதியாக ஒருவன் ஆன்மீகத்தில் வரலாமே ? என்று. இதை, வாதத்திற்குதான் ஒப்புக்கொள்ளலாமே தவிர நடைமுறையில் இது சாத்தியம் என்று கூற இயலாது. ஏனென்றால் ஒரு மனிதன் ஒரு கஷ்ட நிலையில் இருக்கிறான். இறையருளாலோ அல்லது எமது வழிகாட்டுதலாலோ அல்லது இயற்கையாக மாறி வரும் தசா புத்தியாலோ சற்றே மேம்பட்ட ஒரு நிலை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனடியாக எம்மிடம் வந்து “ குருதேவா ! முன்பைவிட இப்பொழுது நிலைமை உயர்ந்திருக்கிறது. வருமானம் அதிகமாகி இருக்கிறது. இந்த உபரி வருமானத்தை என்ன செய்யலாம் ? “ என்று யாராவது கேட்கப் போகிறார்களா ? இல்லை. அடுத்தடுத்து உலகியல் ரீதியான முன்னேற்றத்தை நோக்கிதான் மனித மனம் செல்லும்.
எனவே மீண்டும், மீண்டும் கூறுகிறோம். எந்தவொரு மனிதன் உலகியல் ரீதியாக முன்னேற்றம், சுகம் என்று எண்ணுகிறானோ, அது வெறும் மாயை, கானல் நீர்தான். ஏனென்றால் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு வந்த பிறகு அடுத்த நிலையை நோக்கி அவன் மனம் சென்றுவிடும். ஏற்கனவே பட்ட கஷ்டத்தைவிட இப்பொழுது வாழ்கின்ற வாழ்க்கை எத்தனையோ மடங்கு மேல் என்று எந்த மனமும் எண்ணாது. இவைகள் வெறும் வாதத்திற்குதான் உதவும். உண்மை அது அல்ல.
எனவே எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மனிதன் அன்றாடக் கடமைகளை செய்வதுபோல யாங்கள் கூறுகின்ற கருத்தை சிந்தித்துப் பார்த்து தேவையில்லாத விவாதங்களையெல்லாம் குறைத்து தூஷணைகளை விட்டு, பிறர் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தி, தானுண்டு, தன் கடமையுண்டு, பக்தியுண்டு, தர்மம் உண்டு, சத்தியம் உண்டு என்று எம் வழியில் திடமாக வந்துகொண்டேயிருந்தால் காலப்போக்கிலே அவன் எதையெல்லாம் பிரச்சினை என்று எண்ணுகிறானோ அவைகள் எல்லாம் தீர்ந்ததுகூட அவனுக்குத் தெரியாமல் அதைத் தாண்டி அழைத்து வந்துவிடுவோம்.
மீண்டும், மீண்டும் நாங்கள் கூறுகின்ற கருத்து இதுதான். சத்தியம், தர்மம், பக்தி – இதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டால் எல்லோரும் சுகமாக வாழலாம். ஆசிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக