ஞாயிறு, 31 டிசம்பர், 2017

மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு சுயநலமில்லாத, தூய்மையான மனம் உள்ள அரசியல் தலைவர்கள் நமக்கு கிடைப்பார்களா என்ற கேள்விக்கு ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய வாக்கு


இறைவன் அருளால், இதுபோன்ற நல்ல ஆசை பல மனிதர்களுக்கு இருக்கிறது. அவை நடக்க வேண்டும் என்று நாங்களும் ஆசிர்வாதம் செய்கிறோம். ஆனால் நடக்காது என்பதுதான் உண்மையிலும் உண்மையாகும். வேண்டுமானால் இறைவனே பிறந்து வந்து ஆண்டால் உண்டு. அதுவும் நடக்கப்போவதில்லை. ஆனால் இப்படி கேட்கின்ற மனிதன் ஒன்றை மறந்துவிடுகிறான். நல்லவர்கள் ஆளவேண்டும். நல்லவர்கள் அதிகாரிகளாக இருக்கவேண்டும். எல்லா தொழில்துறையிலும் நல்லவர்கள் வேண்டும் என்று ஆசைப்படுகின்ற மனிதன் முதலில் தான் நல்லவனாக மாறவேண்டும் என்று எண்ணுவதில்லை. அடுத்ததாக தன்னால் நல்லவனாக வாழ முடியாமல் போனாலும் பாதகமில்லை. நல்ல நிலையில் இருக்கக்கூடிய மனிதனை எப்பொழுதுமே மதிக்கவேண்டும், பாராட்டவேண்டும் என்கிற குணம் மனிதர்களுக்கு வருவதில்லை.

ஒரு நிறுவனத்திலே நூறு பேர் பணியாற்றுவதாகக் கொள்வோம். அதில் பத்து மனிதர்கள் நூற்றுக்கு நூறு அப்பழுக்கற்று நேர்மையாக நடப்பதாகக் கொள்வோம். மிகுதி உள்ள தொண்ணூறு மனிதர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் ?  ‘ பிழைக்கத் தெரியாதவன், மூடன், இவனையெல்லாம் யார் இங்கே இட்டது ? இவன் இருந்தால் நமக்கு ஆபத்து ‘ என்று நல்லவர்களுக்கு தொல்லைகள் தருவதே மற்ற மனிதர்கள்தானே ? முதலில் தன்னை சுற்றியுள்ள நல்ல மனிதர்களை மதிக்க மனிதன் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மனிதர்களுக்கு நன்றாகவே தெரியும், நல்லவர்களை பகைத்துக்கொண்டாலும் பாதகமில்லை. அவனால் எந்த பாதிப்பும் வராது. ஆனால் தீயவர்களிடம் அடங்கிப் போகவேண்டும். தீயவர்களைப் பகைத்துக்கொண்டால் உடனடியாக அவனால் ஏதாவது பாதிப்பு வரும் என்று அடங்கிப் போகிறான். ஆனால் நல்லவர்களைக் கண்டால் மனிதர்களுக்கு அச்சம் அகன்றுவிடுகிறது. அவனிடம் மதிப்பும், மரியாதையும் ஏற்படுவதில்லை. எந்த இடத்தில் நல்லதைப் பார்த்தாலும் வெளிப்படையாக பாராட்டுகின்ற குணம் மனிதர்களுக்கு வளரவேண்டும். ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக குறைந்துகொண்டே வருகிறது.  சிறிய, சிறிய நிகழ்ச்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது ஒரு சிறிய தொழில் செய்யக்கூடிய மனிதனாக இருக்கலாம். அவன் நேர்மையாக நடந்தால் அவனை ஆதரிக்கவேண்டும். அவன் எங்கிருந்தாலும் சென்று அவனுக்கு அந்தத் தொழில் வாய்ப்பை தரவேண்டும். ஆனால் பெரும்பாலும் மனிதர்கள் எந்த விஷயத்திலும் நல்லவர்களை ஆதரிப்பதில்லை. இதற்கு காரணம் நாங்கள் கூறியதுபோல நல்லவர்களை ஆதரிப்பதால் உடனடியான பலன் யாருக்கும் கிடைப்பதில்லை.

உதாரணமாக இவள் கேட்ட வினாவையே எடுத்துக்கொள்வோம். இந்த நாட்டை ஆள உண்மையாகவே ஒரு நல்லவன் இறைவனால் அனுப்பப்பட்டுள்ளதாகக் கொள்வோம். தலைமை பதவிக்கு அவன் வந்துவிட்டான். அவனுக்குக் கீழே நூறு மந்திரிகள் இருக்கிறார்கள். நூறு மனிதர்களும் நேர்மையானவர்கள், நல்லவர்கள் என்று வைத்துக்கொள்வோம். நூற்றி ஒன்று ஆகிறது. இவர்களுக்கு கீழே நூறு நல்ல அதிகாரிகள் இருப்பதாகக் கொள்வோம்.ஆனால் அடுத்த கணம் ஏனைய நிலையில் உள்ள அனைத்து ஊழியர்களும் நல்லவர்களாக மாறிவிடுவார்களா என்ன ?  ஒரு நல்லவன் மேலே ஏறி அமர்வதால் என்ன நடக்க போகிறது ? கீழே உள்ள அத்தனை பேரும் நல்லவர்களாக மாறப்போகிறார்களா என்ன ? நேற்று வரை கையூட்டு பெற்ற அதிகாரி இன்று ஒரு நல்ல மந்திரி வந்துவிட்டார் என்பதற்காக தன்னை திருத்திக்கொள்ளப் போகிறானா என்ன ? கட்டாயம் திருத்திக்கொள்ளப் போவதில்லை. வேண்டுமானால் சற்றே சாமர்த்தியமாக அந்த தவறை செய்யப் பழகுவானே தவிர தன்னை திருத்திக்கொள்ள மாட்டான்.

அடுத்ததாக தவறான வழியில் செல்லக்கூடிய மனிதர்களுக்கு நிறைய செல்வம் கிடைக்கிறது. அந்த செல்வத்தின் ஒரு பகுதி அவனை அண்டிப் பிழைக்கும் மனிதர்களுக்கு கிடைக்கிறது. எனவேதான் தவறான மனிதர்களை பலரும் ஆதரிக்கிறார்கள். நல்லவர்களால் எந்தவிதமான வெளிப்படையான ஆதாயமும் யாருக்கும் கிடைக்காததால்  ‘ இவனை ஆதரித்து என்ன பயன் ? ‘ என்று எண்ணுகிறார்கள். எனவே நல்லவர்கள் நாடாள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் முதலில் தன்னை சுற்றியுள்ள நல்லவர்களை மதிக்கட்டும். எந்தத் தொழிலாய் இருந்தாலும் நேர்மையாய் செய்யக்கூடியவர்களை ஆதரிக்கட்டும். அதன் பிறகுதான் நல்லவர்கள் மேலிடத்தில் வருவதற்குண்டான சூழல் ஏற்படும். ஏனென்றால் இப்பொழுது நல்லவர்கள் கூட ‘ நாம் நல்லவர்களாக இருந்தால் பிழைக்க முடியாது போலிருக்கிறது ‘ என்று மெல்ல, மெல்ல நல்ல தன்மையை இழந்து கொண்டிருக்கிறார்கள். எனவே நல்ல எண்ணங்களுக்கும், நல்ல செயலுக்கும் அங்கீகாரம் எப்பொழுது மற்ற மனிதர்கள் தருகிறார்களோ, எந்த சமுதாயம் தருகிறதோ, பயத்தின் அடிப்படையில் மரியாதை வராமல் ஒரு மனிதனின் பண்பின் அடிப்படையில் மரியாதை வந்தால் அந்த சமுதாயம் கட்டாயம் நன்றாக மேலேறும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக