வியாழன், 17 ஆகஸ்ட், 2017

தீராத தலைவலி பிரச்சினை தீர ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி



 இந்த கபால வேதனை என்பதுகூட ஒரு பிறவியிலே, அந்த பிறவி முழுக்க சிலருக்கு மன உளைச்சலைத் தந்ததின் பாவத்தின் எதிரொலி.  ஒவ்வொரு பிணிக்கும் ஒரு கர்மவினை என்றுமே காரணமாக அமைகிறது. சில பிணிகளுக்கு பல்வேறு பாவவினைகள் காரணமாக அமைகிறது. பொதுவாக இவற்றைக் கூறினாலும்கூட அப்படியெல்லாம் ஏற்றுக்கொள்வது என்பது எம்மால் இயலாது. மனித தேகம் என்பது ஒரே விதமாக படைக்கப்பட்டாலும் சில மாற்றங்கள் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டு. மன அழுத்தம் அல்லது தீவிரமான சிந்தனை – இவற்றிலிருந்து துவங்கி நூற்றுக்கணக்கான காரணங்கள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் இந்த கபால வேதனைக்கு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனவே திருப்பழனம் என்றொரு ஸ்தலம் இருக்கிறது, காவிரியின் கரையிலே. கபால தொல்லைகள் இருக்கும் மனிதர்கள் அங்கு சென்று இயன்ற வழிபாடுகள் செய்வது கட்டாயம் நல்ல பலனைத் தரும். அதற்காக இல்லின் அருகிலே ஒரு ஆலயம் இருக்கிறது. அங்கு சென்றால் தீராது என்று தவறாகக் கருதிவிடக்கூடாது. குறிப்புக்காக இதனைக் கூறுகிறோம். இந்தக் கபால வேதனை என்பது ஆணுக்கும் வருகிறது, பெண்ணுக்கும் வருகிறது. யாருக்கு தீவிரமாக இருக்கிறதோ அது ஒருவகையான வினையின் எதிரொலி என்பதை புரிந்துகொண்டு பரிபூரண சரணாகதி பக்தியும், இயன்ற தொண்டும் செய்து வந்தால் கட்டாயம் அதிலிருந்து விடுதலை பெறலாம்.

ஆபத்சகாயநாதர் கோவில், திருப்பழனம்

சிவஸ்தலம் பெயர் :திருப்பழனம்
இறைவன் பெயர் :ஆபத்சகாயநாதர்
இறைவி பெயர்: பெரியநாயகி

எப்படிப் போவது

திருவையாறு - கும்பகோணம் பேருந்து வழியில் திருவையாற்றில் இருந்து கிழக்கே 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு ஆபத்சகாயநாதர் திருக்கோயில்
திருப்பழனம்
திருப்பழனம் அஞ்சல்
வழி திருவையாறு
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613204

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.


கோவில் அமைப்பு:

ஆலயம் ஒரு ராஜகோபுரத்துடனும் அடுத்து ஒரு உள்கோபுரத்துடனும் அரைந்துள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடதுபுறம் பிராகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

உள்மண்டபத்தில் நுழைந்ததும் நேரே மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் இங்கு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா வெளிச்சம் சுவாமியின் மேல்படுகிறது. கருவறை தென்பற கோஷ்டத்தில் நடுவில் ஜடாமுடி, நெற்றிக் கண்ணுடன் சிவனும், இடதுபக்கம் தட்சிணாமூர்த்தியும், வலதுபுறம் கஜசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். வெளிப்பிராகாரத்தில் அம்பாள் பெரியநாயகி சந்நிதி உள்ளது. பலாமரம், தலமரமான வாழை உள்ளன. ஆலயம் முழுவதும் அழகிய சிற்பஙளுடன் விளங்குகிறது. திருப்பழனம் ஆலயத்தை ஒரு கலைப் பெட்டகம் என்றே கூறலாம்.

குபேரன், திருமால், திருமகள், சந்திரன், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலமான திருப்பழனம் திருவையாற்றைச் சார்ந்த சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.

நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கு உரியதான திங்களூர் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அப்பூதி அடிகளின் அவதாரத் தலம். அப்பர் பெருமான் தனது பதிகங்களில் அப்பூதி அடிகளின் தொண்டினைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். ஆலயத்தின் இராஜகோபுரத்தில் சுதைச் சிற்பமாக "திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல்" காட்சி அளிப்பதைப் பார்க்கலாம். விடம் தீர்த்த பதிகம் என்று போற்றப்படும் "ஒன்று கொலாம்" என்ற பதிக நிகழ்ச்சிக்கு இடமான தலம் திருப்பழனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக