எப்பொழுதுமே புராண கதைகளை நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் கூடாது. சூரிய பகவான், ஆத்மகாரகன் என்று ஜாதகத்திலே கூறப்படுகின்ற ஒரு கிரகம். அதே சமயம் ஆத்மம் எனப்படும் ஞானத்தையும், தெய்வீக விஷயத்தையும் கூட அது மறைமுகமாக குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த இடத்திலே மனம் ஓரிடத்தில் அடங்கினால்தான் எதையும் கற்க இயலும். அதே சமயம் மெய்ஞானம், ஆன்மீகம் போன்ற விஷயங்கள் எல்லாம் உலகியல் விஷயங்கள் போல உடனடியான நன்மைகளையும், சுகத்தையும் மனிதனுக்கு வெளிப்படையாக புரிவதுபோல் தராததால், அதை ஆர்வம் கொண்டு கற்க ஒரு மனிதன் முயன்றாலும் அவன் மனம் ஓரிடத்தில் அடங்காததால் அங்கும், இங்கும் அலையும் அல்லது அந்த ஆன்மீக விஷயங்கள் அவனை அலைக்கழிக்கும். அந்த அலைக்கழிக்கின்ற விஷயங்களுக்கு இடையே, அலைகள் மேலே ஏறி, கீழே விழுந்து என்னதான் நாவாயை தூக்கிவிட்டாலும் அந்த நாவாயானது திடமாக ஆழியில் செல்வதுபோல ஒரு ஆத்மஞான தத்துவத்தையும், மெய்யான வேதங்களையும் கற்கவேண்டுமென்றால் பல்வேறுவிதமான நிலைக்கு தன்னை ஒரு மனிதன் ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வழியில் சிந்தித்துப் பார்த்தால் குருவானவர் எஃதாவது கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், அந்த விஷயம் பின்னர். ஆனால் கற்றுக்கொள்வதற்கு உண்டான தளத்தை அவர் முதலில் எதிர்பார்ப்பார். முற்காலத்தில் குருவானவர் வேதங்கள் கற்க வருகின்ற மாணாக்கனிடம் விதவிதமான சோதனைகளையெல்லாம் தந்து அவற்றில் அவன் தேர்ந்த பிறகுதான் வேதம் கற்றுக்கொள்ளவோ அல்லது அவன் எந்த வித்தைக்காக வந்தானோ அந்த வித்தையை போதிக்க அனுமதிப்பார். அப்படியொரு சோதனைதான் ஒரு மாணாக்கனை அலைக்கழித்தல் என்பது. அப்படி அலைந்து, திரிந்து, சோர்ந்து போகாமல் எந்த நிலையிலும் விடாப்பிடியாக “ நான் வேதங்களை, வேத சூத்திரங்களை, அந்த நுட்பமான விஷயங்களை கற்றுக்கொண்டே தீருவேன் “ என்றால் “ நீ இங்கு வா, நீ அங்கு வா, நீ இந்த சூழலில் இன்று வராதே, நீ நாளை வா “ என்று கூறும்பொழுது அந்த அலைக்கழித்தலிலே மனம் சோர்ந்து போகாமல் மேலும், மேலும் ஆர்வம் அதிகரிக்கிறதா ? என்று பார்த்து கற்றுக்கொடுப்பார். அப்படியொரு சோதனைதான் “ நான் ஓடிக்கொண்டே இருப்பேன். என் பின்னால் என் வேகத்திற்கு ஈடுகொடுத்து நீ வருவாயா ? என்று ஒரு பொருள். அதற்காக இந்த சூரியன் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அந்த சூரியன் பின்னால் வா என்று நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் கூடாது. அப்படிப் பார்த்தாலும் சூரியன் இருக்கும் இடத்தில்தானே இருக்கிறது. பூமிதானே சுற்றுகிறது என்று மனித விஞ்ஞானம் கூறுகிறது. எனவே இதை நேருக்கு நேர் பொருள் கொள்ளுதல் ஏற்புடையது அல்ல.
இறைவன் அருளால் நீ கூறுவதை உண்மை என்று வைத்துக்கொண்டு பார்ப்போம். விதிக்கப்பட்டது அல்லது விலக்கப்பட்டது என்று பார்க்கும்பொழுதே ஒருவன் உடல் பலம் எதற்கு பெறவேண்டும் ? பிறரோடு போரிட வேண்டும் என்றால் உடல் பலம் வேண்டும். பிறரோடு போரிடுவதையே முட்டாள்தனம் என்று நாங்கள் கூறும்பொழுது போர் என்பது அடிப்படையில் மனிதனுக்கு தேவையில்லாத விஷயம். அடுத்த நிலையிலே, அப்படி ஒருவன் வாழவேண்டும் என்ற குடும்பத்திலோ அல்லது ஒரு சூழலிலே பிறப்பு எடுக்கிறான் என்றாலே என்ன பொருள் ? அந்த பாவத்தை செய்துதான் ஆகவேண்டும் என்கிற ஒரு பிறப்பு எடுக்க வேண்டுமானால் அவன் என்ன பாவத்தை ஏற்கனவே செய்திருப்பான் ? எனவே பாவத்தை செய்யாமல் இருந்தால், தவிர்க்க முடியாமல் பாவத்தை செய்ய வேண்டிய அல்லது ஒரு பாவத்தை செய்துகொண்டே அதற்கு ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய நிலைமை ஒரு மனிதனுக்கு வராது. வேதங்களிலோ அல்லது எம்போன்ற மகான்களோ இஃதொப்ப விலங்குகளைக் கொன்று இவர்கள், இவர்கள் உண்ணலாம். இவர்கள், இவர்கள் உண்ணத் தேவையில்லை என்று கூறவில்லை. இவைகள் அனைத்துமே இடைசெருகல்களே. எந்த இடத்திலும் இறைவனோ, ஞானியர்களோ இதுபோன்ற விஷயங்களைக் கூறவில்லை, போதிக்கவில்லை. மனிதன் தன் சுயநலத்திற்கேற்ப இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக