புதன், 12 செப்டம்பர், 2018

விநாயகர் வழிபாடு பற்றி ஸ்ரீ அகத்தியர் அருளிய ஜீவ வாக்கு

மூத்தோனை வணங்கு. வணங்கி பின் பயணம் துவங்கு. மூத்தோனை வணங்கு. வணங்கி, வணங்கி உன் தடைகளை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி, வணங்கி உன் பாவ கர்மாவை அகற்று. மூத்தோனை வணங்கு. வணங்கி, வணங்கி உன் செயல் யாவும் ஜெயமாகும் என்ற நினைப்புக்கு ஆளாகு. மூத்தோனை வணங்கு. வணங்கி, வணங்கி உன் குறையெல்லாம் அகற்றிக்கொள். மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு என்று நாங்கள் எம் முன் அமர்பவன் இளையோனாக இருந்தாலும், மூத்தோனாக இருந்தாலும் கூறுகிறோமே. ஏன் ? மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு என்றால் அங்கு மூப்பை குறிப்பதல்ல. அது மூப்புக்கெல்லாம் மூப்பான அந்த மூத்தோன், இறையின் அந்த வடிவம் விக்கினங்களைக் களையக்கூடியது. தடைகளை களையக்கூடியது. எண்ணிய காரியத்தை ஜெயமாக்கக் கூடியது. எனவேதான் நாங்கள் எதையெடுத்தாலும் ‘ மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு ‘ என்று கூறுகிறோம். இஃதொப்ப ஒருவன் வினவலாம். நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருள் ஒன்றுதான். வடிவம்தான் வேறு, வேறு என்று கூறுகின்ற சித்தர்கள் ‘ ஏன் மூத்தோனை வணங்கு, இளையோனை வணங்கு, அன்னை ‘ திரு’ வை வணங்கு ‘ என்று கூறவேண்டும் ? பரம்பொருளை வணங்கு என்று கூறலாமே ? கூறலாம்தான். ஆனால் இஃதொப்ப பலமுறை நாங்கள் உதாரணம் கூறியிருக்கிறோம். சுவையான இனிப்பு பண்டங்கள் விற்கின்ற அங்காடியிலே முன்பெல்லாம் ஒரு வகையான இனிப்பு பண்டங்கள் அதிலும் குறிப்பாக ஆலய திருவிழாக்களில் விற்பார்கள். அனைத்தும் சுவையான இனிப்பிலே விதவிதமான வண்ணங்களிலே செய்யப்பட்டிருக்கும். ஒன்று மிளகாய் பழம் போல் இருக்கும். இன்னொன்று பாகற்காய் போல் இருக்கும். ஒன்று சிங்கம் போல் இருக்கும். இன்னொன்று கிளி போல் இருக்கும். கடித்து சுவைத்தால் அனைத்தும் ஒரே சுவைதான்.  ஆனால் இதை அறியாத குழந்தை என்ன சொல்லும் ? ‘ எனக்கு மிளகாய் பழம் மிட்டாய் வேண்டாம். அந்த சுவை நன்றாய் இராது. நாவிலே காரம் தாங்காது. கனி வடிவத்தில் இருக்கின்ற சுவையை வாங்கிகொடு ‘ என்று கூறும். வடிவம்தான் வேறு. ஆனால் சுவை ஒன்று என்பது குழந்தைக்கு தெரியாததுபோல அனைத்துவிதமான தெய்வ வடிவங்களும் விதவிதமாக இருந்தாலும் இருக்கின்ற பரம்பொருள் ஒன்று. பிறகு ஏன் மூத்தோனை வணங்கு என்று கூறுகிறோம் ? ஒரு மனிதன் அலுவலகத்தில் அதிகாரியாக அரசாட்சி செய்கிறான். இல்லத்தில் தாரத்திற்கு கணவனாக செயலாற்றுகிறான். பிள்ளைக்கோ தகப்பன் என்ற நிலையில் செயலாற்றுகிறான். நன்றாக கவனிக்க. அவன், அலுவலகத்தில் ஒரு கைசான்று இடவேண்டுமென்றால் அதற்கான விதிமுறை வேறு. அதே தருணம் பிள்ளையவன், வித்தை கூடத்திலிருந்து ஒரு கைசான்று கேட்கிறார்கள் என்றால், அலுவலகத்தில் கடைப்பிடிக்கும் அதே விதிமுறையை பின்பற்ற இயலுமா ? இயலாதல்லா?

இப்படி ஒரே மனிதன் இல்லத்தில் ஒருவிதமாகவும், அலுவலகத்தில் ஒருவிதமாகவும், பொது இடத்தில் ஒருவிதமாகவும், ஆலயத்தில் ஒருவிதமாகவும் நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதுபோல பரம்பொருளும் தடைகளை நீக்கும்பொழுது விநாயக வடிவத்திலும், அஃதொப்ப செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும்பொழுது முருகப்பெருமான் என்ற வடிவத்திலும், மனிதனுக்கு அன்பை போதிக்கும்பொழுது அன்னை வடிவத்திலும், மனிதனுக்கு பொருளாதார நெருக்கடியை தீர்க்கும்பொழுது மகாலக்ஷ்மி வடிவத்திலும், இறை, மனிதனுக்காக தன் உருவத்தை மாற்றிக்கொள்கிறார். இதில் பேதங்கள் ஏதுமில்லை. அதற்காக உருவத்தை மாற்றி வணங்கினால் கேட்டது கிடைக்காது என்ற தவறான பொருளை கொள்ளவேண்டாம். இல்லை, ‘ எனக்கு பிடித்த ஒரே உருவத்தை நான் எப்பொதுமே வணங்கிக்கொள்கிறேன் ‘ என்றாலும் பாதகமில்லை. இருந்தாலும் நாங்கள் கூறுகிறோம் என்றால் அதில் இறைவனின் சூட்சும காரணங்கள் இருக்கும் என்பதால் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. பின் பயணம் துவங்கு. ஆசிகள்.

பெண்கள் மூத்தோனை எவ்வாறு வழிபடுவது ?

பெண்களுக்கு மூத்தோன் என்றால் முதலில் கணவன் என்று நாங்கள் கூறுவோம். கணவனை வணங்கு என்று நாங்கள் பெண்களைப் பார்த்து கூற இயலுமா இக்காலத்திலே ? இன்னொரு வகையில் பார்த்தால் உடன் பிறந்தவர்களில் யார் மூத்தவர்களோ அவர்களை வணங்கவேண்டும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, விநாயகப் பெருமானை வணங்குகின்ற தன்மையைதான் நீ வினாவாக கேட்டிருக்கிறாய். இறைவனை வணங்குவதற்கென்று விதிமுறைகள் என்று வேதங்களிலும், ஆகமங்களிலும் எத்தனையோ கூறப்பட்டிருந்தாலும் கூட, எம்மிடம் வருகின்ற சேய்களுக்கு நாங்கள் அதனையெல்லாம் வலியுறுத்துவதில்லையப்பா. ஏனென்றால் விதிமுறைகளைக் கூறினால் பிறகு விதிமுறைகள்தான் அங்கே இருக்குமே தவிர பக்தி இல்லாமல் போய்விடும். விதிமுறைகள்,  புரிவதற்காக வகுக்கப்பட்டவை. அதனையே பிடித்துக்கொண்டு மனிதன் தொங்குவதுதான் வேதனையிலும் வேதனை.



காசியிலே இருந்தால் முக்தி என்றால், இவன், காசியிலே இறந்தால் முக்தி என்று எண்ணிக் கொள்கிறான். காசி என்றால் ஆக்ஞா சக்கரம். அங்கே நினைவை நிறுத்தி, நிறுத்தி, நிறுத்தி சதாசர்வகாலம் அந்த காசியிலே இருந்தால் அது முக்திக்கு வழிவகுக்கும். பஞ்சமா பாதகங்களை செய்து விட்டு, காசியிலே இறந்தால் முக்தியா கிட்டும் ?  தனி நரகமே ஏற்படுத்த வேண்டுமல்லவா ?

தேர் இழுக்க வேண்டுமென்றால் குண்டலினி எனப்படும் தேரினை, எண்ணங்கள் என்னும் கயிற்றால், வைராக்யம் எனும் வலிமையால் மேலே ஏற்றி, ஏற்றி மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் என்று ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து சஹஸ்ர ஆதாரத்திற்கு கொண்டுவந்து அதனை நிலை நிறுத்தவேண்டும். அந்தத் தேர் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும். இந்தத் தேர் மேலே வந்துவிட்டால் கீழே இறங்குவது கடினம். ஆனால் வைராக்யம் பெற்ற ஞானிகள் மேலும், கீழும் இந்த குண்டலினி தேரையும் இழுப்பார்கள். இதற்கு உவமானமாக ஒரு தேரை வைத்து அதனுள் சுவாமியை வைத்து இழுப்பது என்று சுட்டிக்காட்டினால், அந்தத் தேர் இழுப்பதையே பெருமையாக வைத்துக்கொண்டு அதிலும் கலவரத்தை வளர்த்துக்கொண்டு வாழ்கின்ற மனிதக் கூட்டத்திற்கு எதனைக் கூறுவது ? எனவே விதிமுறைகளை விட்டுவிட்டு ஆத்மார்த்தமாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் எப்படியெல்லாம் இறைவனை வணங்கத் தோன்றுகிறதோ……. பாசத்திற்குரிய தந்தையை, அன்பிற்குரிய மனைவியை, பாசத்திற்குரிய அன்னையை, குழந்தையை எப்படியெல்லாம் பார்க்கிறார்களோ அப்படி பார்த்து, அப்படி பேசிக்கொண்டால் அதுதான் உண்மையான வழிபாடு.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

ஸ்ரீ சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 88வது குரு பூசை விழா




மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .

குத்துக்காலிட்டு மகன் தியானம் செய்துகொண்டிருப்பதையும் அவனுடைய உடலை நாகம் ஒன்று சுற்றிக்கொண்டு தலையின் மீது படம் எடுத்து நிற்பதையும் கண்டார் . “அய்யனாரப்பா என் மகனைக் காப்பாற்று” என்று குரல் எழுப்ப அந்தப் பாம்பு சட்டென்று மறைந்துவிட்டது. அதைக் கண்ட அவர் தம் மகன் சாதாரணப் பிறவியல்ல என்று உணர்ந்து கொண்டார்.

சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

குரு செல்லப்ப சுவாமிகள்

மன்னார்குடியைச் சேர்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரான செல்லப்ப சுவாமிகள் இராமேசுவர யாத்திரை செல்லும் வழியில் கட்டிக்குளத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .

ஆசிர்வாதமும் வழிநடத்தலும்

ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .

ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .

ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார் .

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் .

சட்டையைக் கழற்றிவிடலாமா?

நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .

சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார் .

சனி, 8 செப்டம்பர், 2018

ஸ்ரீ பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

திருவாரூர் - தஞ்சை மார்க்கத்தில் திருவாரூரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விளமர் என்று புராணத்திலும், தற்போது விளமல் என்றும் வழங்கப்படும் இதற்கு திருவாரூரிலிருந்து டவுன் பஸ் வசதி உண்டு. பஸ் நிறுத்தத்திற்கு வெகு அருகில் கோவிலைக் காணலாம். காவிரித் தென் கரைத் தேவாரத் தலங்களில் இது 90ஆவதாகும். 

தலபுராணம்

தில்லையில் நடராசனைக் கண்டு களித்த பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் பாம்புருவாகவும், புலிக்காலாகவும் மாறித் திருவாரூரில் கமலாம்பிகையைத் தரிசித்து, அவள் கூறியவண்ணம், விளமர் என்னுமிடத்தில் விமலாக்கவைரம் என்னும் தேவலோக மண்ணால் லிங்கம் பிடித்து வழிபட, அதில் மகிழ்ந்த ஈசனார் அவர்களுக்குப் பிரத்யட்சமாகி, அஜபாவன நர்த்தனம் ஆடித்தன் ருத்ர பாதத்தைக் காட்டியருளினார் என்பது இத்தலப்புராணமாகும்.

தசரதர் புத்திரபாக்கியம் வேண்டித் தவமிருந்த தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கு பைரவர் ஷேத்ரபாலகராகப் பிரத்யட்சமானதால், தனியாக நவக்கிரக சந்நதி கிடையாது. இங்கு திருமாலின் சிரசில் எம்பெருமானார் திருவடி வைத்திருப்பது மற்றொரு சிறப்பு.
திருவாரூர் தியாகராஜன் முகத்தையும், இங்கு ருத்ரபாதத்தையும் ஒரே நாளில் தரிசிப்போருக்கு பிறவாநிலை கிட்டும் என்பர்.

மூலவர் பதஞ்சலி மனோகரர் என்று பெயர் கொண்டுள்ளார்.

சிவனாரின் மூன்றாவது தீக்கண்ணைப் போல, இங்கு மதுரபாஷினி என்னும் திருநாமம் கொண்டுள்ள அம்பிகைக்கு நெற்றியில் சந்திரன் குளிர்ச்சியான மூன்றாம் கண்ணாக அமைந்துள்ளது பெரும் சிறப்பு. தன்னை தஞ்சமென வந்த அடியோருக்குக் கருணைக்கடலாக விளங்கும் தாயாகிறாள்.

தலச்சிறப்பு

இறக்கும் தருவாயில் உள்ளோருக்காக இங்கு மோட்சதீபம் ஏற்றுகிறார்கள். அவர்களுக்குப் பிறவிச் சங்கில் அறுந்து விடும் என்பது நம்பிக்கை.
கோள்களினால் ஏற்படும் சகலதோஷங்களுக்கும், குறிப்பாக ராகு கேதுவினால் உண்டாகும் காலசர்ப்ப தோஷத்திற்கு, இது பரிகாரத்தலமாக விளங்குகிறது.